தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று (19.03.2012) 10 மணி முதல் நடுத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு தற்போது ஏராளமான பெண்கள், மற்றும் முதியவர்கள், புதிய அட்டைகளை பெற்று செல்வதற்காக வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிகழ்வினை நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் முன்னிலையில் பெரும்பாலான வார்டு கவுன்சிலர்களின் முயற்சியால் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் இராமநாதபுரம் மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலர் திரு சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு, அடையாள அட்டை வழங்கும் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.
இது குறித்து திரு சுரேஷ் அவர்கள் கூறும் போது "ஏற்கனவே மருத்துவ காப்பீட்டுக்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், தங்கள் ரேசன் கார்டினைக் காட்டியோ அல்லது பழைய மருத்துவ காப்பீட்டு அட்டையை காண்பித்தோ, புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மின்வெட்டினால் கொஞ்ச நேரம் பணிகள் தொய்வடைந்தாலும், தற்போது மிக துரிதமான முறையில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று மாலை 5 மணி வரை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அட்டைகள் வழங்கப்படும்.
அதே நேரம், ஏற்கனவே மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் இல்லாத நபர்கள், விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழும், ரேசன் கார்டு நகலும் இணைத்து அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடமோ அல்லது அதற்கான சிறப்பு முகாம்கள் நடை பெறும் போதோ கொடுக்கலாம்." என்று தெரிவித்தார்.
பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்வை பயன்படுத்திக் கொள்ளுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மருத்துவ காப்பிட்டுத் திட்ட முகாம் அலுவலகத்தை நேரிலோ அல்லது கட்டணமில்லா தொலை பேசியிலோ (தொலைபேசி எண் - 1800 425 3993) அணுகலாம்.
No comments:
Post a Comment