தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துதல், பள்ளின் வளர்ச்சியில் பங்கு, சமூக பொறுப்பு, கல்வி போதிப்பதில் அர்ப்பணிப்பு உள்ளிட்ட பணிக்காக ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சார்பாக, நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின் படி, கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமையப் பெற்றுள்ள சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜனாபா. A .ராபியா பேகம் M.A., M.ED., அவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது. இந்த செய்தியினை அறிந்த கீழக்கரைவாசிகள், பள்ளி நிர்வாகத்தினர், இந்நாள், முன்னாள் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியப் பெருந்தகைகள், விருது பெற்ற தலைமை ஆசிரியை அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து வாழ்த்து செய்தி வெளியிட்டிருக்கும் சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஹாஜியானி. ஜனாபா. K.M.V.ஆபிதா பேகம் (கீழக்கரை நகராட்சி சேர்மன் வேட்பாளர் ) அவர்கள் நம்மிடையே பேசும் போது
"எல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே உரித்தாகட்டும். இந்த வருடத்திற்கான நல்லாசிரியர் விருது ஜனாபா. A .ராபியா பேகம் அவர்களுக்கு கிடைக்கப் பெற்றதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
உண்மையாகவே, விருது பெற தகுந்த ஒரு முனைப்பான ஆசிரியைக்குத் தான் இந்த விருது கிடைத்திருக்கிறது. மாணவ மணிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் அருமையான பாங்கு, சிறப்பான நிர்வாகத் திறமை, சக ஆசிரியப் பெருந்தகைகளை ஊக்குவிக்கும் விதம், இரக்க சிந்தனையுடன் கூடிய உதவி மனப்பான்மை,
அர்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் விதம் என்று அனைத்திலும் மிகச் சிறப்பாக, பல்லாண்டு காலமாக கல்வி சேவையாற்றிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு, இறைவன் அருளால், இன்னும் பல விருதுகள் கிடைக்க, இறைவனை வேண்டுகிறேன்" என்று மனதார தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
கீழக்கரை நகரில், பல ஆசிரியப் பெருந்தகைகள், இந்த விருதுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இவர்களுக்கு மட்டும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான விருதினை ஆசிரியர் தின விழாவான இன்று (5–ந்தேதி) சென்னையில் பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் வழங்குகிறார்.
இவ்விழாவில் 370 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நன்னாளில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
FACE BOOK COMMENTS :