தேடல் தொடங்கியதே..

Thursday 9 August 2012

கீழக்கரையில் போக்குவரத்துக்கு இடையூறு தரும் மணல் குவியல்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் !

நம் கீழக்கரை நகரில்  வீடு கட்டுபவர்கள், மாணவ மாணிவிகள் பள்ளி செல்லும் காலை நேரங்களில் சாலைகளில் மணலை கொட்டி வைத்திருப்பதால் அவை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு மட்டுமல்லாமல் விபத்துக்களுக்கும் வழி வகுக்கிறது. பல தெருக்களில் புதிதாக வீடு கட்டுபவர்கள் இரவு நேரங்களில் சாலைகளை ஆக்கிரமிக்கும் வகையில் மணல், முண்டுக்கல், ஜல்லி கற்கள் போன்றவற்றை கொட்டி வைத்து விடுவது மேலும் போக்குவரதுக்கு இடையூறாக இருந்து வருகிறது.




இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் இணைச் செயலாளர் B. செய்யது காசீம் அவர்கள் கூறும் போது "தார்ச் சாலையாக இருக்கும் சாலைகள் பலவும், தற்போது மீண்டும் மணல் சாலைகளாக மாறி வருகிறது. முக்கியமாக கீழக்கரை நடுத் தெரு, சாலை தெரு, O.J.M.தெரு உள்ளிட்ட தெருக்களில் மணல் குவியல்கள் அதிகமாக கிடக்கின்றன. நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் பிரதான சாலைகளில் உள்ள மணல், ஜல்லி போன்றவற்றையும் உடனடியாக அப்புறப்படுத்த, கட்டிட உரிமையாளர்கள் மற்றும் காண்டிராக்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வகையில் கொட்டப்படும் லாரிகள், டிராக்டர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இது குறித்து ஜின்னா தெருவைச் சேர்ந்த மேஸ்திரி ஹபீப் அவர்கள் கூறும் போது "நமது ஊரைப் பொருத்தமட்டில் மிகக் குறுகிய சாலைகளையும், நெருக்கமான வீடுகளையும் கொண்டு அமைந்துள்ளது. வேறு வழியில்லாமல் தான் இது போன்று சாலைகளில் கொட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. சாலைகளில் கொட்டிய பிறகு அதனை அகற்றுவதற்கு வேலையாள்கள் பல நேரங்களில் கிடைக்காமல் போவதாலும் தொடர்ந்து இரண்டு அல்லது 3 நாள்கள் அங்கேயே கிடக்கும் நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் சாலைகளில் மணலை கொட்டக் கூடாது என்றால், யாருமே வீட்டு கட்டுமான வேலைகளை செய்ய முடியாது." என்று தெரிவித்தார்.

நம் நகரின் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, மணலை கொட்டி விட்டு உடனே அள்ளுவதற்கு, வேலையாள்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போது எந்த பிரச்சனைகளும் எழ வாய்ப்பில்லை. அதோடு மட்டுமல்லாமல் மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் நேரங்களில் மட்டுமாவது, கட்டுமான பொருள்களை சாலைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment