தேடல் தொடங்கியதே..

Thursday 29 November 2012

கீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை !

தேயிலை, காபி போன்ற பானங்களை அருந்துவது  நம் நாட்டின் பழக்கமல்ல. அவையெல்லாம் மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே.  நம் நாட்டின் பெரும் பகுதிகள் வெப்பமிகுந்த பகுதியாக இருப்பதால், இங்கு வாழ்ந்த நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, மல்லி, பனைவெல்லம் கலந்த பானமும், மாலையில் சுக்கு, மல்லி, மிளகு கலந்த மூலிகை குடிநீர் பானமும், இரவு வேளைகளில் கடுக்காய் கசாயமும் அருந்தி முதுமையிலும் இளமையாக வாழ்ந்து வந்தனர். 


இப்போது மாறிப் போன பாரம்பரியங்களின் மத்தியில், பல இடங்களில் சுக்கு மல்லி காபியெல்லாம் மறைந்தே போய்  விட்டது. இதனை இன்றும் ஞாபகப் படுத்தும் விதத்தில் கீழக்கரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில், மின்வாரிய அலுவலகம் அருகாமையில் கமகமக்கும் வாசனையுடன்,  சூடான 'சுக்கு மல்லி காபி' விற்பனை எந்நேரமும் களை  கட்டி வருகிறது. இதனை சண்முகவேலு, இராசம்மாள் என்ற வயது முதிர்ந்த தம்பதி நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து 70 வயதை தொட்டாலும் எந்நேரமும் சுறுசுறுப்போடு வேலை செய்து கொண்டிருக்கும் திரு. சண்முகவேலு தாத்தா அவர்கள் கூறும் போது "45 ஆண்டு காலமாக கீழக்கரை செக்கடி பகுதியில் உள்ள 'செட்டியார் காபித்தூள்' கடையில் விற்பனையாளராக வேலை செய்தேன். 1988 ஆம் ஆண்டு முதல் தனியாக இந்த இடத்தில் கடை திறந்து பருத்திப் பால் விற்பனையை துவக்கினேன். பிறகு 1998 ஆம் ஆண்டு முதல் சுக்கு மல்லி காபி வியாபாரம் செய்து வருகிறேன். எனக்கு துணையாக, காபி தயாரிக்கும் எல்லா வேலைகளிலும் என் மனைவி இராசம்மாள் அவர்களும் உதவியாக இருக்கிறார்கள்.ஆரம்பத்தில் மிக சொற்பமானவர்களே எங்கள் சுக்கு காபியை அருந்தி சென்றனர். பின்னர் மெல்ல மெல்ல, இதன் சுவையில் சொக்கி போன வாடிக்கையாளர்கள் தினமும், வந்து அருந்தி மகிழ்வுடன் செல்கின்றனர். 


நாங்கள் விற்பனை செய்யும் இந்த சுக்கு மல்லி காபியின் அலாதியான சுவைக்கு இயற்கையான முறையிலும், சுத்தமான வகையிலும் தயாரிக்கும் விதம் தான் காரணம்.  காலை, மாலை மற்றும் இரவு உணவிற்கு முன்/ பின் என எந்த நேரமும் இதனை அருந்தலாம். டீ, காபி, பால் மற்றும் விலை மிக்க பாட்டில்/டின் பானங்கள் போன்றவற்றிற்கு சிறந்த மாற்று பானாமாகும். அதன் கெடுதல்கள் இதில் இல்லை.குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் சாப்பிடலாம். செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல்,சளி,ஆஸ்துமா,சர்க்கரை,சோம்பல் போன்றவற்றிற்கு பலனளிக்கும். அற்புத முதலுதவி மருந்து நெஞ்சு வலி, இருதய தாக்கு, மூட்டு வலி, வயிற்று பொருமல், ஆஸ்துமா, வாயுதொல்லை போன்ற அனைத்து நோய்களுக்கும் இது சிறந்த முதலுதவி பானமாகும். அனைத்து காலங்களுக்கும், எல்லா வயதினருக்கும் ஏற்றது. வந்து ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  

இது குறித்து 'சுக்கு மல்லி காபி' பிரியர், தம்பி நெய்னா பிள்ளை தெருவைச் சேர்ந்த  ஜமாலுதீன் அவர்கள் கூறும் போது "நான் எப்போது இராமநாதபுரம் செல்ல பயணித்தாலும், தாத்தா கடையில் சுக்கு மல்லி காபி குடிக்காமல் செல்வதே கிடையாது. கீழக்கரை ஸ்பெசல் லிஸ்டில் தொதல், பணியம், மாசி ஊறுகாய் வரிசையில் இந்த சுக்கு காப்பியும் சேர்ந்துள்ளது. கீழ்க்கரைக்கு புதிதாக வரும் என் நண்பர்களை இங்கு அழைத்து செல்லாமல் இருப்பது இல்லை. இங்கு சுக்கு காபியை தொடர்ந்து அருந்துவதால், நாள் முழுதும் சோம்பல் இல்லாமல், புத்துணர்வோடு இருக்கிறது.மேலும் அதிகபடியான் பித்தம் குறைவதோடு  ஜீரணத்தைத் தூண்டி, பசியை அதிகரிக்கிறது" என்று சுக்கு காபியை சுவைத்தவாறு புத்துணர்வோடு தெரிவித்தார்.

இது குறித்து மற்றுமொரு 'சுக்கு மல்லி காபி' பிரியர், தட்டார் தெருவைச் சேர்ந்த  செல்வக் குமார் அவர்கள் கூறும் போது "நான் இராமநாதபுரம் இந்தியன் வங்கியில் தங்க நகை மதிப்பீட்டளராக வேலை செய்கிறேன். தினமும் இந்த சாலை வழியாகத் தான் பைக்கில் வேலைக்கு செல்கிறேன்.கடந்த பல ஆண்டுகளாக வேலைக்கு செல்லும் போதும், வேலை முடிந்து ஊருக்கு திரும்பும் போதும் தாத்தா கடையில்  சுக்கு மல்லி காபி அருந்தி விட்டு செல்வது தான் வழக்கம். இந்த பழக்கத்தை மாற்ற முடியவில்லை. இதன் தனிச் சுவை என்னை கட்டிப் போட்டு விட்டது. தாத்தாவிடம் காபி செய் முறையை கேட்டுத் தெரிந்து கொண்டு வீட்டிலும் செய்து பார்த்தேன். ஆனால் இங்கு குடிக்கும் போது கிடைக்கும் சுவையை வீட்டில் தயாரிக்கும் போது பெற முடிய வில்லை."என்று புகழாரம் சூட்டினார். 

கடல் கடந்து வெளி நாடுகளில் வசிக்கும், கீழக்கரை வாசிகளுக்காக, 'சண்முகவேலு தாத்தா' அவர்கள் தரும் சுக்கு காபி செய்முறை விளக்கம்

சுக்கு,மல்லி காபி (தேவையானவை)   
  •   சுக்கு - சிறு துண்டு
  •   மல்லி - 2ஸ்பூன் 
  •   மிளகு - சிறிதளவு 
  •  வெல்லம் / பனைவெல்லம் அல்லது கருப்பட்டி - தேவையான அளவு
  •   தண்ணிர் - தேவையான அளவு

செய்முறை:
  • முதலில் சுக்கையும், மிளகையும் வெயிலில் நன்கு காயப் போட்டு, பொடித்துக் கொள்ள வேண்டும்,
  • மல்லியை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வருத்துக்   கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் நீர் உற்றி சுடானதும் அதில் பொடித்த சுக்கு,வறுத்த மல்லி ஆகியவற்றை போட வேண்டும்.
  • 10 -15 நிமிடம் நன்றாக வாசனை வரும் வரை
  • கொதிக்கவைத்து தேவையான வெல்லம் அல்லது பனை வெல்லம்   சேர்த்து  இறக்கினால் சுவையான சுக்கு,மல்லி காபி தயார்...
  • இதில் பால் சேர்த்தும் அருந்தலாம்
(குறிப்பு : என்ன தான் சுக்கு காபியை வீடுகளில் தயார் செய்து அருந்த நினைத்தாலும், தாத்தா கடையில் மட்டுமே அதன் தனிச் சுவையை ருசிக்க முடியும் என்பது உண்மை )

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் நம் நாட்டில் மக்களின் உணவுகள் மிக எளிமையாக இருந்தன. வந்த நோய்களும் குறைவு. அவையும் சாதாரண வியாதிகளே. ஏதாவது வந்தால் குடும்பத்தில் தாய்மார்கள் தனக்கு தெரிந்த கைவைத்தியம் செய்து கொள்வார்கள். அனுபவம் மிகுந்த முதியவர்கள் ஆலோசனை சொல்லுவார்கள். இந்த ஆலோசனையில் ஒன்று சுக்குத் தண்ணீர் என்பது. அதாவது சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் போல கொதிக்க வைத்து அவசியமானால் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது பல நோய்களுக்கும் நல்லது. இதுவே சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு வெந்நீர், சுக்கு மல்லி காபி, கொத்து மல்லி காபி, என்று பலவாறாக ஆகியது.

மழைக் காலத்தில் சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுவோர் உண்டு. நெஞ்சில் கபம் சேரச் சேர பிரச்சனை தீவிரமாகிறது. அலோபதி மாத்திரைகளால் தாற்காலிக நிவாரணம் கிடைக்கலாம்; ஆனால், இந்த மாத்திரைகள் சளியை உடலிலிருந்து வெளியேற்றாமல் இருப்பதால் பிரச்சினை அவ்வப்போது தலைதூக்கி தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும். அதைக் குணப்படுத்த சிறந்த இயற்கை மருத்துவம் இந்த சுக்கு மல்லி காப்பியே... காபி, டீ, கொக்கோ போன்ற பானங்கள் இரைப்பையை பாதித்து சளிச்சவ்வை சீர்குலைத்து சீரணத்தைத் தடுக்கிறது. பல சமயங்களில் இதயத்தைக் கூட ஒழுங்கு தவறி துடிக்கச் செய்கின்றன.  இப்பானங்ளில் உள்ள சர்க்கரை உடலுக்கு சூட்டை அளிக்குமே தவிர, சத்துக்களைத் தருவதில்லை. ஆகவே இது போன்ற இயற்கை மூலிகை பானங்களை வாரத்தில் ஒன்றிரண்டு முறையாவது அருந்துவது உடல் நலத்திற்கு நலம் பயக்கும்.

Wednesday 28 November 2012

கீழக்கரையில் இன்று (28.11.2012) மின்சாரம் இருக்காதாம் !? - பவர் இல்லைனாலும் 'பவர் கட்' !

கீழக்கரை துணை மின் நிலையத்தில் இன்று (28.11.2012) புதன் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை, ஏர்வாடி, முகம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம்,  காஞ்சிரங்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், காலை 10 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற் பொறியாளர்  க‌ங்காத‌ர‌ன் தெரிவித்துள்ளார்.

கீழக்கரை பகுதியில் ஏற்கனவே 16 மணி நேரம் அறிவிக்கப்படாத மின் வெட்டு நிலவி வரும் வேளையில், இது போன்ற அறிவிப்புகள் நகைப்புக்குரியதாக இருப்பதாகவும், 'இல்லாத' மின்சாரத்தில்.. மீண்டும் எப்படி பவர் கட் செய்ய முடியும்?? என்றும் அப்பாவித் தனமான கேள்விகளை எழுப்பிய வண்ணம், பொது மக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்ய துவங்கி விட்டனர். அப்பாவிகளாக... 


2013-லும் மின்சாரம் கிடைப்பது கஷ்டம் தானாம்... (மின்சாரம் இருந்தால் இதையும் படியுங்கள்)

**ஜூனியர் விகடனில் 'ஷாக்... ரிப்போர்ட்' தரும் கட்டுரையாளர் எஸ்.முத்துகிருஷ்ணன் **
தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மின் வெட்டுப் பிரச்னையைத் தான் தேர்தல்  பிரசாரத்தில் முக்கிய ஆயுதமாக ஜெயலலிதா கையில் எடுத்தார்.  'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டே இருக்காது என்று உறுதி அளித்தார். முதல்வரானதும் அவர் வெளியிட்ட அறிக்கை​யில், '2012-ம் ஆண்டு ஜூனில் 1,865 மெகா வாட் மின்சாரம் கிடைத்துவிடும். அப்போது மின் வெட்டு சீரடையும்'' என்று ஆறுதல் கூறி​னார். ஆனால், மின்பற்றாக்குறை 2 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம்... 16 மணி நேரமானதுதான் மிச்சம். சென்னைவாசிகளுக்கு 2 மணி நேரம்தான் மின்வெட்டு என்பதால், கஷ்டம் தெரியவில்லை. மற்ற மாவட்டத்துக்காரர்கள் தலைசுற்றிக் கிடக்கிறார்கள்!

முழுநாளும் மின்வெட்டாக மாறுவதற்குள் அரசு செய்ய வேண்டியது என்ன ? என விவரிக்கிறார் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் கே.விஜயன். ''மின்சாரப் பற்றாக்குறை ஒன்றும் தமிழகத்துக்குப் புதியது அல்ல. மின் வாரியத்தின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, 1982-ம் ஆண்டில் இருந்தே மின் பற்றாக்குறை இருக்கிறது. ஆனால், ஒட்டு​ மொத்தத் தமிழகமும் வீதிக்கு வந்து போராடும் அவலநிலை இப்போது தான் ஏற்பட்டு இருக்கிறது. மின்சாரத்துக்காகப் போராடி, போராடி மக்களும் களைத்து விட்டனர்.

முதல்வர் ஜெயலலிதா, 'என்னாலும் தாங்க முடியவில்லை. அதற்காக, ஆயிரம் முறை அல்ல; லட்சம் முறை வருந்துகிறேன்’ என்று கூறியுள்​ளார். வருந்தினால் மின்சாரம் வரும் என்றால், மக்கள் சந்தோஷப்படுவார்கள். மின்சாரப் பற்றாக்குறை 2013-ல் தீர்ந்து விடும்; அதுவரை பொறுத்துக்​கொள்ளுங்கள் என்பது தான் முதல்வரின் கடைசி ஆறுதல்.

கடந்த 45 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. தான் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. மின் பற்றாக் குறைக்கும் மக்கள் படும் அவதிகளுக்கும் இந்த இரண்டு அரசுகளுமே பொறுப்பு. மாநிலத்தின் மின்தேவை ஆண்டுக்கு 8 முதல் 10 சதவிகிதம் வரை அதிகரித்துக் கொண்டே போகிறது. தேவை அடிப்படையில் இப்போதுள்ள மின் உற்பத்தியோடு 8 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால், தமிழக மின் உற்பத்தி அரசுத் தரப்பில் கடந்த 16 ஆண்டுகளில் 578 மெகா வாட் மட்டும்தான் உயர்ந்து இருக்கிறது. இது தான் மக்கள் மீது அரசுக்கு உள்ள அக்கறை.


ஆனால், இதே காலகட்டத்தில் 1996-ம் ஆண்டு 108 லட்சங்களாக இருந்த மின் நுகர்வோர் எண்ணிக்கை, 2,000-ல் 138 லட்சங்களாகவும் 2012-ல் 232 லட்சங்களாகவும் உயர்ந்து இருக்கிறது. இதே போல், 1,869 பன்னாட்டு நிறுவனங்​களும் 42 சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் உருவாகின. 300 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்த நிறுவனமாக இருந்தால், தடை இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். புதிய பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசுதான் அனுமதி அளிக்கிறது. அதற்கான மின்சாரத்தைத் தடையின்றித் தருவதாக தமிழக அரசும், அதற்கான ஒப்பந்தத்தில் உறுதிமொழி அளித்து இருக்கிறது. அதே போல், மக்களுக்குத் தேவை​யான மின்சாரத்தைத் தடையின்றிக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? ஏன் எடுக்க​வில்லை. மக்கள் போராட்டம் நடத்தியவுடன், '2013-ல் மின்சாரம் வந்துவிடும்; எதிர்காலத்துக்கும் 4,887 மெகா வாட் அளவுக்கு மின் திட்டங்கள் கைவசம் உள்ளன என்று முதல்வர் கூறியுள்ள சமாதானத்தை என்னவென்று சொல்வது?

2007-ம் ஆண்டில் புதிதாக வடசென்னை மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. நிதி இல்லாததால், கட்டுமானப் பணி தாமதமானது. மின் தேவையைக் கணக்கில் கொண்டு கட்டுமானப் பணிகளை அவசரப்படுத்தி, 2011-ம் ஆண்டு தொடக்கத்திலேயே மின் உற்பத் தியைத் தொடங்கி இருந்தால், 1,800 மெகா வாட் மின்சாரம் கிடைத்திருக்கும். இப்போது, 500 மெகா வாட், மேட்டூரில் அனல் மின்நிலையத்தில் சோதனை ஓட்டம் நடக்கிறது.

வட சென்னையில் 600 மெகா வாட் திட்டத்துக்குத் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்தத் திட்டங்களோடு, திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் திட்டம் 500 மெகா வாட் யூனிட் ஒன்று தயாராகி விட்டது. அதிலும் சோதனை ஓட்டம் நடக்கிறது. இந்த மூன்று திட்டங்களும் 2013-ல் முழுவீச்சில் மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், கூடங்குளம் திட்டத்தின் மூலம் 925 மெகா வாட் மின்சாரம் கிடைத்தால், பிரச்னையை ஓரளவுக்கு சமாளித்து விடலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் கணக்குப் போட்டு உள்ளனர்.

ஆனால், நடைமுறையில் அதற்கான வாய்ப்பே இல்லை. இப்போது இயங்கி​வருகிற தமிழக மின் வாரியத்தின் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்காததால் அதிகமாகத் தேவைப்படும் 35 லட்சம் டன் நிலக்கரி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. புதிதாகத் தொடங்கப்பட்டு உள்ள வடசென்னை, மேட்டூர் அனல் மின் நிலையங்களுக்கு 90 லட்சம் டன் நிலக்கரி தேவை. ஆனால், மத்திய அரசு 37 லட்சம் டன் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து உள்ளது. மீதி 53 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாட்டில் இருந்துதான் கூடுதல் விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை. மின் உற்பத்திக்குத் தயாராக இருந்தாலும் நிலக்கரியைத் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தால் தான் தடையற்ற மின்உற்பத்தி சாத்தியம்.



1970-ல் தொடங்கப்பட்ட 450 மெகா வாட் எண்ணூர் அனல் மின் நிலையம், 600 மெகா வாட் நெய்வேலி அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி எல்லாம் ஆயுள் முடிந்து போய் ஓடிக்கொண்டு இருக்கிறது. 600 மெகா வாட் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் வயது 30. அதுவும் உரிய பராமரிப்பு இல்லாமல் இந்த ஆண்டில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் இரு முறை தீப்பிடித்துப் பாதிக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. மேலும், காலாவதி ஆகிப்போன இந்த அனல் மின் நிலையங்களில் படிப்படியாக உற்பத்தித் திறன் குறைந்துகொண்டே வருகிறது.

இதற்கு மாற்றாக, புதிய அனல் மின்நிலையங்கள் அமைக்க வேண்டிய கட்டாயம். இப்போது, அரசு அறிவித்துள்ள உடன்குடி, உப்பூர், எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் 8,000 மெகா வாட் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நிதி ஒதுக்கி, மத்திய அரசின் நிலக்கரி ஒதுக்கீடு பெற்று, செயல்பாட்டுக்கு வர கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிடும். எனவே, ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல திட்டங்களைத் தூசி தட்டினால், ஓரளவுக்கு மின் தேவையை சரிசெய்ய முடியும்.

18 சதவிகிதம் லைன் லாஸ் என்று கூறப்படும் மின் இழப்பை 15 சதவிகிதமாகக் குறைத்தாலே, 300 முதல் 400 மெகா வாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும். சென்னையில் பேசின் பிரிட்ஜ் அருகில் 493 கோடியில் டீசல் மூலம் 180 மெகா வாட் மின் நிலையம் கடந்த ஓர் ஆண்டாக மின் உற்பத்தி செய்யவில்லை. ஆனால், இந்த மின் நிலையத்தின் அருகில் உள்ள தனியார் மின்நிலையம் டீசல் மூலம் தினமும் 200 மெகா வாட் மின் உற்பத்தி செய்கிறது. இதே போல மாநிலம் முழுவதும் தனியாரின் ஏழு யூனிட்கள் சிறப்பாகச் செயல்படுகிறது. அவர்கள், மின் வாரியத்துக்கு மின்சாரத்தை விற்கிறார்கள். எனவே, பேசின் பிரிட்ஜ் அரசு டீசல் மின் நிலையத்தில் முழுவீச்சில் உற்பத்தியை உடனே தொடங்க வேண்டும்.

எரிவாயு மூலம் மின்உற்பத்தி செய்ய 396 மெகா வாட் மின் உற்பத்தி எந்திரங்கள், 50 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே மின்உற்பத்தி செய்கின்றன. தென் மாவட்டத்தில்  அமைக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒரு நாள்கூட முழுமையான 92 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை. ஏன் முழுமையான மின் உற்பத்தியைத் தரவில்லை என்று கேட்பாரும் இல்லை. தஞ்சை மாவட்டம் குத்தாலத்தில் 105 மெகா வாட் எரிவாயு மின் நிலையத்தில் ஒரு வருடமாக மின் உற்பத்தி இல்லை. சோலையாறு நீர் மின் திட்டத்தில் ஜெனரேட்டர் பழுது காரணமாக 70 மெகா வாட் மின் உற்பத்தி முடங்கிப்போய்க் கிடக்கிறது.

மாநிலத்தின் மொத்த மின் நுகர்வில் 38 சதவிகிதம் தொழில் நிறுவனங்களுக்குத் தான் தேவைப்படுகிறது. அதாவது, கிட்டத்தட்ட 4,000 மெகா வாட் தேவை. இதில், 3,600 மெகா வாட் மின்சாரத்தை அந்தந்தத் தொழிற்சாலைகளே உற்பத்தி செய்யும் வகையில் அவர்கள் ஜெனரேட்டர்கள் வைத்துள்ளனர். ஜெனரேட்டர் டீசலுக்கு ஆகும் செலவில் மின்சாரக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு  5.50 போக மீதி 12, அந்த மாநில அரசு ஏற்க வேண்​டும். தனியாரிடம் யூனிட்டுக்கு சராசரியாக 12 கொடுக்கும் நிலையில் இது ஒன்றும் கூடுதல் செலவு அல்ல. ஆகவே, பிரச்னையை சமாளிக்க இப்போதைக்கு அனுமதிக்கலாம்.

மேலும், மின்வெட்டு உள்ள காலங்களில் அலங்கார மின்விளக்குகள், ஆடம்பர விளக்கு​களுக்குத் தடை விதிக்க வேண்டும். திருட்டு மின்சாரம் எடுப்பதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ஐந்து ஆண்டுகளில் 3,000 மெகா வாட் சூரிய ஒளி மின் திட்டம் திட்டத்தைப் படிப்படியாகத் தான் நிறைவேற்ற முடியும். இதற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இந்தத் திட்டத்தை முதலில் நட்சத்திர ஹோட்டல்கள், பெரிய வர்த்தக நிறுவனங்களில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். இப்போதுள்ள மின் உற்பத்தித் திட்டங்கள் மற்றும் தேவை  அடிப்படையில் பார்த்தால், இப்போதுள்ள மின்வெட்டு 2017-ல்தான் சீரடைய வாய்ப்பு இருக்கிறது. அதுவரை மேற்கூறிய மாற்று ஏற்பாடுகளைச் செய்தால் தான் ஓரளவுக்கு மின்வெட்டை சரிசெய்ய முடியும்'' என்றார்.

மின்வெட்டு குறித்து மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ''மின்சாரப் பிரச்னை குறித்து முதல்வர் மிகுந்த கவலையில் உள்ளார். மின் தட்டுப்பாட்டைக் குறைக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மின்நிலை குறித்து வாரா​ வாரம் ஆய்வு செய்கிறோம். கூடுதல் மின்சாரம் கேட்டாலும் மத்திய அரசு தரவில்லை. மத்தியத் தொகுப்பில் இருந்து தரவேண்டிய மின்சாரத்தையும் 1,000 மெகா வாட் அளவுக்குக் குறைத்துள்ளது. நிலக்கரி ஒதுக்கீட்டிலும் ஓரவஞ்சனை செய்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து விலைக்கு மின்சாரம் வாங்கினாலும் அதைக் கொண்டுவரும் வழித்தடத்தை மத்திய அரசு அமைத்துத் தரவில்லை. இருப்பினும் தமிழக அரசு செய்யும் முயற்சிகளால், 2013 ஜூனில் மின் வெட்டு சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.

                     வெளிச்சக் கிரகணங்கள் வெகுதூரத்தில் இருக்​கின்றன!

Sunday 25 November 2012

கீழக்கரையில் லேசான சாரல் மழை - வெயிலுடன் வீசும் குளிர் காற்று !

கீழக்கரை நகரில் இன்று (25.11.2012) அதிகாலை முதலே லேசான தூறலுடன் சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேக மூட்டம் இல்லாமல் வெறித்தே காணப்படுகிறது. அவ்வப்போது வெயிலும் அடித்து வருகிறது. இருப்பினும் குளிர் காற்று வீசிய வண்ணம் உள்ளது. இந்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. கீழக்கரை பகுதியில் கடந்த மாதம் பெய்த கன மழைக்கு பிறகு மழையின் அடிச்சுவடே இல்லாமல் வெயிலின் கடுமை வெளுத்து வாங்கியது.  அதன் பின் தற்போது பெய்து வரும் சாரல் மழையால், நகரெங்கும் குளுமை நிலவி வருகிறது. 






வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலையான தென் தமிழ்நாடு மற்றும் கேரளாவையொட்டி பரவுயுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  

மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக தென் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், தென் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சில்ல‌ரை வ‌ர்த்த‌க‌த்தில் அந்நிய‌ முதலீட்டு சதியை முறியடிக்க துண்டு பிரசுரங்கள் விநியோக‌ம் - கீழ‌க்க‌ரையில் மனித நேய மக்கள் கட்சியினர் முயற்சி!

சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நவம்பர் 23, 24, 25 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் துண்டுப் பிரசுர விழிப்புணர்வு பரப்புரை நடத்தி வருகிறது. வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இதுகுறித்து முழு விபரங்கள் அடங்கிய 1 கோடி துண்டுப் பிரசுரங்கள் வினியோகத்தை மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் கட்சியின் தலைமை நிர்வாகிகள் தொடங்கி வைத்து பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். 




இவை தவிர, சுவரொட்டிகள், வீதி முழக்கங்கள், தெருமுனைக் கூட்டங்கள், வாகன பரப்புரை என பன்முக அம்சங்களோடு, தமிழகமெங்கும் இப்பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. மதுரையில் ம.ம.க.பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் இதற்கான நிகழ்ச்சிகளை துவங்கினார். 





இந்நிலையில் கீழக்கரையிலும், இதற்கான விழிப்புணர்வு பிர‌ச்சார‌த்தில் கீழக்கரை நகர் நிர்வாகிகள் ஈசி ஜெராக்ஸ் சாதிக், இக்பால், மாவட்ட தலைவர் பகுதிகளுக்கு  ந‌டை பய‌ண‌மாக‌ சென்று வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் துண்டு பிர‌சுர‌ங்க‌ளை வழங்கி, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு நுழைந்தால் அனைத்து தரப்பு மக்களும் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்?என்பதனை விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தற்போது தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நுழையா விட்டாலும் கூட, வழங்கப்பட்டு வரும் பரப்புரையால், எதிர் காலங்களில் பொது மக்கள் இது குறித்த விழிப்புணர்வோடு இருப்பார்கள் எனபது நிதர்சனமே..