தேடல் தொடங்கியதே..

Tuesday 25 June 2013

கீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் !

கீழக்கரையில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஓரிரு நாள்கள் கன மழையும், ஜூன், ஜூலை மாதத்தில் மிதமான மழையும் பெய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் எதிர்பார்த்த படி, குறித்த காலத்தில் பருவமழை பொய்த்துப் போனது. ஏற்கனவே வறட்சியான மாவட்டம் என பெயர் போன, நம் இராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாயப் பெருமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். அது மட்டும் அல்லாமல் கீழக்கரை நகரின் பெரும் பகுதிகளில் உள்ள வீடுகளின் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வற்றிப் போயுள்ளது. 


இதனால் பொதுமக்கள் குளிப்பதற்கு கூட போதுமான நீர் கிடைக்காமல் கடும் அவதி அடைய துவங்கியுள்ளனர். இதே நிலை இன்னும் சில மாதங்கள் தொடர்ந்தால், இதுவே நகரின் தலையாய பிரச்சனையாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீழக்கரை பகுதிக்கு ஆய்வுக்கு வந்திருந்த அரசு அதிகாரிகள், அதி நவீன‌ கருவிகள் கொண்டு கீழக்கரையில் காற்றின் ஈரப்பதம், ஆக்சிஜன் அளவு, மழையின் அளவு போன்ற பல்வேறு கணக்கெடுப்புகளை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில், கீழக்கரையில் பசுமை அளவு 38 % இருக்க வேண்டும் ஆனால் 21 %  மட்டுமே இருக்கிறது. இது இயல்பான அளவினை விட மிக குறைவானதாகும். 

பசுமை அளவு குறைந்த பட்சம் 33 % அளவாவது இருக்க வேண்டும் என்று அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டதோடு, கீழக்கரை பகுதிகளில் பசுமை அளவை அதிகரிக்க 'வீட்டுக்கு ஒரு மரம்' வளர்க்க வேண்டும் அல்லது வீட்டின் மாடியில் ஆக்ஸிஜன் தரக்கூடிய சிறிய மரம் அல்லது செடியை வளர்க்க வேண்டும். இல்லை எனில் எதிர் காலத்தில் மழையளவு குறைவதோடு, நிலத்தடி நீர் வெகுவாக குறைய ஆரம்பிக்கும். 



மேலும் இந்த சீரில்லாத இயற்கை மாற்றத்தால், கீழக்கரைவாசிகளுக்கு  பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும். கீழக்கரையில் இயற்கை சீற்றங்களும் நிகழ வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி சார்பாக வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை நடை முறைப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு. திண்ணாயிர மூர்த்தி அவர்கள் கூறும் போது "தற்போது கீழக்கரையில் மழை சரியாக பெய்யாத காரணத்தால்  நிலத்தடி நீர் ஆதாரம் வெகுவாக குறைந்துள்ளது. அவ்வாறு மழை பெய்தாலும், பெரும் அளவிலான மழை நீர் பூமிக்குள் செல்ல வழியில்லாமல், கடலில் கலந்து வீணாகிறது. கீழக்கரையை பொருத்தமட்டில் அனைத்து வீடுகளிலும் கிணறுகள் உள்ளது.

ஆகவே குறைவாக பெய்யும் மழை நீரையும் முறையாக சேகரிக்க, வருங்காலத்தை மனதில் கொண்டு, அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பை அமைக்க பொதுமக்கள் முன் வர வேண்டும். இது வரை மழை நீர் சேகரிப்பை அமைக்காதவர்களின் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு செய்ய  வலியுறுத்தி விழிப்புணர்வு செய்து வருகிறோம்" என்று அக்கறையுடன் தெரிவித்தார்.


இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் A.M.S.தமீமுதீன் அவர்கள் கூறுகையில், "கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினரின் இந்த நல்ல முயற்சி வரவேற்கத்தக்கது. வீட்டு கிணறுகளில் தண்ணீர்  இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வரும், இவ்வேளையில், எதிர் காலத்தை கருத்தில் கொண்டு, மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை பொது மக்கள் உணர்ந்து,  தங்கள் வீடுகளில் அதனை அமைக்க விரைந்து செயல்பட வேண்டும். மேலும் பசுமை அளவினை அதிகரிக்கும் வண்ணம் ஆளுக்கொரு மரம் நட்டு வளர்க்க உறுதி எடுக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.

FACE BOOK COMMENTS :


  • Mohamed Quraishi GROW TREE & SAVE WATER& POWER
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழை இளையவரின் செய்திக் குறிப்பில் // வறட்சியான மாவட்டம் என பெயர் போன, நம் இராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாயப் பெருமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். அது மட்டும் அல்லாமல் கீழக்கரை நகரின் பெரும் பகுதிகளில் உள்ள வீடுகளின் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வற்றிப் போயுள்ளது. இதனால் பொதுமக்கள் குளிப்பதற்கு கூட போதுமான நீர் கிடைக்காமல் கடும் அவதி அடைய துவங்கியுள்ளனர். இதே நிலை இன்னும் சில மாதங்கள் தொடர்ந்தால், இதுவே நகரின் தலையாய பிரச்சனையாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.// உண்மை தான்.

    கீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள்
    http://keelaiilayyavan.blogspot.in/2013/06/blog-post_25.html

    நம் தேசத்தில் ஒரு பக்கம் அபரிமிதமான மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்றொரு பக்கம் மழை சிறிதுமின்றி நிலத்தடி நீர் இல்லாமல் வறண்டு போயுள்ளது. 

    அல்லாஹ் நம் அனைவரயும் பாதுகாப்பானாக.

    பெரு மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகவும், மழை வேண்டி காத்திருக்கும் நமக்காகவும் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் இறைவனுடன் இரு கரம் ஏந்தி துஆ செய்ய வேண்டும். 

    தற்போது மழை வேண்டி நமக்காகவும், தாவர இனங்களுக்காகவும், விலங்கின வர்கத்திர்காகவும், உலகில் வாழும் இன்ன பிற ஜீவ ராசிகளுக்கும், போதுமான தண்ணீருக்காக இறைஞ்சுவது நம் கடமையாக இருக்கிறது.

    மழை வேண்டி பிரார்த்திக்கும் போது ஓத வேண்டிய துஆ!

    இரு கைகளையும் உயர்த்தி:

    اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا

    அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா எனக் கூற வேண்டும்.

    பொருள்: இறைவா! எங்களுக்கு மழையைத் தா. (ஆதாரம்: புகாரி 1013)

    اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا

    அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா எனக் கூற வேண்டும்.

    பொருள்: இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! (ஆதாரம்: புகாரி 1014)

    அல்லாஹ் நம் அனைவரயும் பாதுகாப்பானாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

No comments:

Post a Comment