தேடல் தொடங்கியதே..

Friday 28 September 2012

கீழக்கரையில் மண் வாசனையுடன் பெய்த மிதமான மழை !

கீழக்கரை நகர மக்கள், கடந்த சில மாதங்களாக கடுமையான வெயிலின் தாக்கத்தால் தகித்து வந்த நிலையில், நேற்று (27.09.2012) இரவு 9 மணியளவில் லேசான தூறலுடன் மண் வாசனையுடன், மழை  பெய்ய துவங்கியது. பலத்த இடி, மின்னல்களை தொடர்ந்து 2 மணி நேரம் விடாது பெய்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீச துவங்கியது. 



கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை பகுதியில் பெய்த மழையால், சாலையோரங்கள் மற்றும் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. மழை பெய்து கொண்டிருக்கும் போது மின்சார விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்ததால், நகரெங்கும் இருளில் மழையை இரசித்தவாறு பாதசாரிகள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர்.  கீழக்கரையில் பெரும்பாலான வீடுகளில் மழையின்றி கிணறுகள் வறண்டு காணப்பட்ட நிலையில், இந்த மழையால் பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தருணத்தில் பொதுமக்கள் அனைவரும் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.


இராமநாதபுரம், கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் எங்கு நோக்கினும் வெப்பத்தால் வறண்டு காணப்பட்ட அனைத்து நீர் நிலைகளும், இந்த மிதமான மழையால் நனைந்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே, இவை நிரம்பும் என்பதால், இன்னும் பெரிய கன மழைகளை மக்கள் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.

Thursday 27 September 2012

கீழக்கரையில் தாகம் தீர்க்க குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரம் !

கீழக்கரையில் தற்போது தமிழக அரசின் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடி தண்ணீர், வடக்குத் தெரு மணல்மேடு பகுதியில் அமைந்து  இருக்கும் குடி நீர் தொட்டியில் சேமிக்கப்பட்டு, நகருக்குள் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் நகரின் பல இடங்களுக்கு குடி தண்ணீர் வரவில்லை என்றும், அது மட்டுமின்றி பல இடங்களில் பல்லாண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட பழைய குடிநீர் இணைப்புக் குழாய்கள் பழுதடைந்து, சாக்கடை தண்ணீர் கலந்து வருவதாகவும் இதனால் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆட்படுவதாகவும்  பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதனால் தற்காலிகமாக குடி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. 



இந்நிலையில் கீழக்கரை  வினியோகம செய்து வந்த பழைய குடி நீர் இணைப்புக் குழாய்கள் அனைத்தையும்  மாற்ற நகராட்சி நிர்வாகத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனடிப்படையில் ரூபாய் 1 கோடி செலவில் கீழக்கரை நகர் முழுதும் 5 1/2 கிலோ மீட்டர் தூரம் புதிய குடி நீர் இணைப்புக் குழாய்கள் அமைப்பதற்கு், நகராட்சியின் மூலம் தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. இதன் முதல் கட்டமாக 5.5 மீட்டர் நீளம், 4 இன்ச் சுற்று அகலம் கொண்ட துரு பிடிக்காத, இன்சுலேட் செய்யப்பட்ட 200 குடி நீர் இணைப்புக் குழாய்கள் கீழக்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இதனை பொருத்தும் பணி வடக்குத் தெரு பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. 



குழாய்கள் பதிக்க அந்த பகுதியில் 2 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் சற்றே அவதி அடைந்துள்ளனர். இருப்பினும் தாகம் தீர்க்கும் தண்ணீர் தேவைக்காக, பொறுமையுடன் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Wednesday 26 September 2012

இராமநாதபுரத்தில் முஹம்மது நபிகளை இழிவுபடுத்திய அமெரிக்கனுக்கு கண்டனம் - இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் சரித்திரப் பதிவு !

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்தவர்களையும் அதை கண்டிக்க மறுக்கும் அமெரிக்கர்களையும், அந்த திரைப்படத்தை வெளியிட்டுள்ள அனைத்து வலைத்தளங்களையும், அதனை தடை செயய மறுக்கும் மத்திய அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன பேரணியும், கண்டன பொதுக்கூட்டமும், இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பின் புறம் (தாஜ் திருமண மண்டபம் அருகில்) நேற்று (25.09.2012) மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான இஸ்லாமிய அமைப்பினர்கள் ஒரே கூட்டமைப்பின் கீழாக ஒன்றிணைந்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.



ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிய துவங்கியதால், பார்க்கும் இடமெங்கும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. இதில் தமுமுக, ஐ.என்.டி.ஜே, எஸ்.டி.பி.ஐ, சுன்னத் ஜமாத்தார்கள், இஸ்லாமிய வாலிப சங்கம், அனைத்து உலமா பெருமக்கள், அனைத்து ஊர்களின் ஜமாத்தினர்கள், பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள், சங்கங்கள் பெருவாரியாக பங்கேற்றனர்.  இராமநாதபுரம் நகர் கொல்லம்பட்டரை தெருவில் உள்ள இராமநாதபுரத்தின் மிக பழமையானதும், முதல் பள்ளியுமான கொல்லம் பட்டறை பள்ளியில் இருந்து துவங்கிய இந்த பேரணியில் வீர முழக்கமெழுப்பி கண்டன கோசங்களை உணர்ச்சி பொங்க ஓங்கி ஒலித்து வந்தனர். 



இந்த பேரணியில் பங்கேற்ற பலர் கண்டன பதாகைகளை கையில் ஏந்தி சின்க்கடை வீதி வழியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்தும், அன்னல் நபியை இழிவு படுத்திய கொடியவனை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். பல்வேறு அமைப்பினர்களின் முக்கிய நிர்வாகிகள் தங்கள் கண்டனங்களை மேடையில் பதிவு செய்து கொண்டிருக்கும் போது, திரைப்படம் தயாரித்த யூதனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. மேலும் நேற்று அனைத்து இஸ்லாமிய வியாபார நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. இராமநாதபுரம் மாவட்டமெங்கிலும் இருந்து இஸ்லாமிய இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் ஆர்ப்பரித்து வந்தது வரலாறு காணாத சரித்திரப் பதிவாக அமைந்தது. 

Sunday 23 September 2012

கீழக்கரை அரசு மருத்துவமனையில் புதிய வரவாக இதயத்தை துடிக்க வைக்க நவீன 'ஷாக் ட்ரீட்மென்ட்' கருவி !

நம் கீழக்கரை நகரில் வயது வித்தியாசமின்றி, பின்னிரவு நேரங்களில் உக்கிரமான நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற திடீர் ஆபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. அது சமயம் விரைந்து மருத்துவமனை கொண்டு செல்லாத போது, பாதிக்கப்பட்டவரின் இதய துடிப்பு மெல்ல.. மெல்ல... குறைந்து மூர்ச்சையாகி விடும் நிலை ஏற்படுகிறது. இது போன்ற சமயங்களில் இதையத்தை முடுக்கி விட தற்போது அதி நவீன ஷாக் ட்ரீட்மென்ட் கருவி மூலம், நம் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த உயிர் காக்கும் சிகிச்சையை திறம் பட செய்ய, பயிற்சியளிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு  24 மணி நேரமும் பணியில் இருக்கின்றனர்.




இது குறித்து அரசு த‌லைமை ம‌ருத்துவ‌ர் திரு.இராஜமோகன் அவர்கள் கூறும் போது "நம் அரசு மருத்துவமனைக்கு, இத‌ய‌ துடிப்பை சீர் செய்வதற்கான ந‌வின‌ ஷாக் ட்ரீட்மென்ட் க‌ருவி வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த‌ க‌ருவி மூல‌ம் மார‌டைப்பால் பாதிக்க‌ப்ப‌ட்டு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உட‌ன‌டியாக‌ இத‌ய‌ துடிப்பை சீர்செய்ய முடியும். தற்போது கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னை ந‌வீன‌ ம‌ய‌மாக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.‌ மேலும் பல்லாண்டு காலமாக செயல்படாமல் இருந்த மகப்பேறு பிரிவு புனரமைக்கப்பட்டு,  பிர‌ச‌வ‌ம் தொட‌ர்பான‌ சிகிச்சைகளுக்கு தேவையான‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ள், ஸ்கேன், அறுவை சிகிச்சை அரங்கம்  உள்ப‌ட‌ அனைத்தும் கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ஏற்பாடு செய்யப்பட்டு த‌ற்போது குழந்தை பிறப்புகள் நடை பெற துவங்கியுள்ளது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.




இந்நிலையில் நேற்று முன் தினம் மாயாகுள‌த்தில் வ‌சித்து வ‌ரும் ப‌ழ‌னி (வயது 42) என்ப‌வ‌ர் மாராடைப்பு ஏற்ப‌ட்டு, சுய நினைவின்றி,  கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் அனுமதிக்கப்பட்டார்.  இவ‌ருக்கு இத‌ய‌ துடிப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்ததை உணர்ந்த த‌லைமை ம‌ருத்துவ‌ர் ராஜ்மோக‌ன், ம‌ருத்துவ‌ர்கள் சாகுல் ஹ‌மீது, ஹ‌சீன், ஜ‌வாஹிர் ஹுசைன் மற்றும் முத்த‌மிழ‌ர‌சி ஆகியோர் கீழ‌க்க‌ரை அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக்கு புதிய‌தாக‌ வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்ட‌ ந‌வீன‌ ஷாக் ட்ரீட்மென்ட் க‌ருவி மூல‌மாக‌ பாதிக்க‌ப்ப‌ட்டவ‌ரின் இத‌ய‌துடிப்பை சீர் செய்து சிகிச்சை அளித்த‌ன‌ர். இது போன்ற‌ ஷாக் ட்ரீட்மென்ட் சிகிச்சை நம் பகுதி மருத்துவ மனைகளில் பயன்படுத்தப்படுவது இது தான் முத‌ல் முறை என்ப‌து குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அரசு மருத்துவர் ஹசீன் அவர்கள் கூறும் போது "செயற்கை இதயமுடுக்கி (DEFIBRILLATOR), என்பது இதயத் தசைகளை மின் முனைகள் வழியாக தொடர்பு படுத்தி அதன் மூலம் வெளிவரும் மின் துடிப்புகளைப் பயன்படுத்தி இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் ஒரு மருத்துவக் கருவியாகும். இதயமுடுக்கியின் முக்கிய நோக்கம் ஒரு போதுமான இதய விகிதத்தை பராமரிப்பதாகும். இது மின் அதிர்ச்சியை இதயத்துக்கு கொடுப்பதால், செயலிழக்க இருக்கும் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பிக்கும். இந்த கருவி நம் பகுதி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள், பிரசவம் மற்றும் அவசர சிகிச்சை தேவைகளுக்காக, கீழக்கரை அரசு மருத்துவமனையின்  04567 - 244551 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது