தேடல் தொடங்கியதே..

Saturday 28 July 2012

கீழக்கரையில் அவசர கதியில் கட்டப்பட்டு வரும் குப்பை கிடங்கில் தரமற்ற பணிகள் - கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு !

கீழக்கரையின் குப்பைகள் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க, குப்பை கிடங்கை விரைந்து கட்டி முடிப்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்ற நிலை தற்போது உள்ளது. இதற்கிடையே தொடர் இடயூறுகளாலும், சமூக விரோதிகளின் அடாவடியாலும் முடங்கி கிடந்த சுற்றுச்சுவர் கட்டும் பணி பல்வேறு தடைகளையும் தாண்டி, பலத்த காவல்துறை கண்காணிப்புடன் அவசர கதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர் மன்ற கவுன்சிலர்கள் ஜெயப்பிரகாஷ், இடி மின்னல் ஹாஜா, சாகுல் ஹமீது, முகைதீன் இபுறாகீம், பாவா கருணை, அன்வர் அலி, தங்கராஜ் ஆகியோர்கள் அவசர கதியில் கட்டப்பட்டு வரும் குப்பை கிடங்கில் தரமற்ற பணிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். 




இது குறித்து நகர் மன்ற கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ் அவர்கள் கூறும் போது "இங்கு நடக்கும் வேலைகளை பார்க்கும் போது, கண்களில் நீர் வருகிறது. நிச்சயம் இந்த சுற்றுச் சுவர் எத்தனை ஆண்டுகள் தாங்கும் என்று தெரியவில்லை. மக்கள் பணம் இப்படி வீணடிக்கப்படுவது மிகுத்த வருத்தமளிகிறது. கான்கிரீட் என்றால் ஆயுதம் கொண்டு உடைப்பதே கடினம், ஆனால் இங்கு 'கோழி கிளைத்தாலே பள்ளமாகி விடும்' போலிருக்கிறது. ஒப்பந்ததாரர் செய்யும் இந்த தரமில்லாத வேலைகளுக்கு நகராட்சி பணம் பட்டுவாடா செய்யக் கூடாது" என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 




இது குறித்து நகர் மன்ற கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா அவர்கள் கூறும் போது "எதை சொல்லுவது.. எதை விடுவது... நான் நல்லதை எடுத்து சொன்னால் குப்பை கிடங்கின் வேலைகளை நிறுத்த சதி செய்வதாக கூட சொன்னாலும் சொல்லுவார்கள். பரவாயில்லை... சொல்றேன் கேளுங்க ... ஹாலோ பிளாக் என்று சொல்லப்படும் கட்டுமானப் பொருளின் தரம் மிக மோசமாக இருக்கிறது, லேசாக கையை வைத்து அடித்தாலே மாவாக நொறுங்குகிறது. 




12mm கட்டுமான முறுக்கு கம்பிகள் உபயோக்கிக்க வேண்டிய இடத்தில் 8mm உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ரெடி மிக்ஸ் இயந்திரத்தில் கலவையை குழைக்காமல் கைகளால் குழைகிறார்கள், சலங்கை மண்ணை உபயோகிக்காமல் குருத்த மண்ணை உபயோயக்கிறார்கள். இந்த தரமற்ற வேலை தொடர்ந்தால், இந்த சுற்றுச் சுவர் மதிலை இனி சமூக விரோதிகள் யாரும் இரவில் வந்து இடிக்க வேண்டியது இல்லை. இரண்டு வருடத்தில் தானாகவே விழுந்து விடும்," என்று விரக்தியுடன் தெரிவித்தார்.




இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா அவர்களிடம கேட்டபோது “கட்டுமானப்பணி அதி வேகமாக நடை பெற்று வருகிறது.  ஒரு பகுதி முழுவதும் சுற்றுச் சுவர் கட்டும் பணி முடிவடைந்து தற்போது குப்பைகளை தரம் பிரிக்க குப்பை கிடங்கின் நடுவே சிமெண்டு தளம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதே வேகத்துடன் வேலை நடந்தால் எதிர்பார்த்த காலத்திற்கு முன்பே பணிகள் நிறைவடைந்து விடும். 

இங்கு நடைபெறும் வேலைகள் தரமில்லாமல் இருப்பதாக சில கவுன்சிலர்கள்  குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு 'தொடர்ந்து தொட்டதெற்கெல்லாம் குறை' கண்டு பிடித்துக் கொண்டிருந்தால் எந்த பணிகளும் சிறப்பாக நடக்காது. நாங்கள் தொடர்ந்து வேலை நடக்கும் இடத்திற்கு சென்று முறையாக ஆய்வு செய்து வருகிறோம். அவ்வாறு தரம் இல்லாத வேலைகள் இருப்பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். 




நம் கீழக்கரை நகருக்காக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் (2009-2010) குப்பை கிடங்கு  சுவர் கட்ட ரூ.20,00,000 மும்,  ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் IUDM கீழ் (2011-2012) சுற்றுச் சுவர் கட்ட ரூ.21,00,000 மும் , குப்பை கிடங்கில் (விண்ட்ராஸ்) சிமெண்டு தளம் அமைக்க ரூ.29,00,000 மும், ஆக மொத்தம் ரூ.70 இலட்சத்தை திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த குப்பை கொட்டும் தளம் என்பது கீழக்கரையின் குப்பைகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமைய இருக்கும் தருணத்தில், அரசாங்கம் ஒதுக்கியுள்ள சிறப்பான நிதியிலிருந்து தரமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும், குப்பைகளை போக்க வந்த பணத்தினை யாரும் எள்ளளவும் கூறு போட்டு விடக் கூடாது என்பதும், காலத்திற்கும் மாண்பு மிகு முதல்வர் அவர்களின் பெயர் சொல்ல உறுதியுடன் நிலைத்து நிற்கும் கட்டுமானமாக குப்பை கிடங்கு அமைய வேண்டும் என்பதும் பொது மக்கள் அனைவரின் எதிர் பார்ப்பாக இருக்கிறது.

Wednesday 25 July 2012

கீழக்கரையில் வழங்கப்படும் சுவைமிகு 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் !

தமிழகத்தில் பல பகுதிகளில் சிறப்பாக தயாரிக்கப்படும் நோன்புக் கஞ்சியினை அருந்தியே பெரும்பாலானோர் நோன்பு திறக்கின்றனர்.  நோன்பு நேரத்தில் சோர்வு வந்தாலும், நோன்பு கஞ்சி அருந்தி நோன்பு திறக்கும் போது அது அனைத்து சக்தியையும் தந்து விடுகின்றது.  தமிழ்நாட்டு முஸ்லிம் மக்கள் மற்ற நாடுகளில் வாழ்ந்தாலும் கூட  நோன்பு  கஞ்சி தாங்களாகவே தங்கள் வீட்டில்  தயாரித்தாவது  அதனைக் கொண்டு நோன்பு திறக்கின்றனர்.  



ஒவ்வொரு ஊரிலும் நோன்பு கஞ்சிகளின் செய்முறையும் சுவையும் வேறுபடலாம். ஆனால் கீழக்கரைபள்ளிவாசல்கள் மற்றும் பொது நல சங்கங்கள் சார்பில் சமைக்கப்படும் நோன்பு கஞ்சிகளின் தனிச் சுவையால் மவுசு அதிகமாகவே இருக்கிறது. கீழ‌க்க‌ரையில் உள்ள பெரும்பாலான பள்ளி வாசல்களில் ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் மாலைநேர‌ தொழுகைக்குப் பின்  பொதுமக்களுக்கு நோன்பு க‌ஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. 


இந்த ஆண்டும் மணம் கமழும், அதீத சுவையுடன் கூடிய பள்ளிவாசல் நோன்பு கஞ்சியை சிறுவ‌ர்க‌ள் முத‌ல் பெரிய‌வ‌ர்க‌ள் வ‌ரை ஆர்வ‌த்துட‌ம் வ‌ரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். இதனால் கீழக்கரையில் நோன்பு திறப்பதற்கு மிகப் பிரதான உணவாக, நோன்பு கஞ்சி இருக்கிறது. கீழக்கரையில் செய்யப்படும் நோன்பு கஞ்சியில் வெந்தயம், பாசிப்பருப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் போன்றவை சேர்வதால், உடல் களைப்பை போக்கி, பலத்தை கொடுக்கிறது. 


அதிரை நிரூபர் குழுவினரின் ஏற்பாட்டில் CHEF. பாரூக் அவர்கள் விளக்கும் நோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி என்ற காணொளி (வீடியோ) காட்சிகளை காண பின் வரும் லிங்கை சொடுக்கி காணலாம்.

நோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி ? காணொளி (வீடியோ) காட்சி 
                               http://www.youtube.com/watch?v=5wxkFQ8MhtI


இந்த வருடம் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளி வாசல்களுக்கு 3800 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டிருந்தார். இதன் எதிரொலியாக பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு, செயல் வடிவம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடைந்ததுடன், 3800 மெட்ரிக் டன்கள் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Tuesday 24 July 2012

கீழக்கரையில் குப்பைகளால் வஞ்சிக்கப்பட்ட பகுதிகள் - தீராத வேதனையில் குமுறும் பொதுமக்கள் !

கீழக்கரையின் சுகாதார சீர்கேடுகளை களைய, மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு, கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம் (PWPO), கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கம் (KMSS) உள்ளிட்ட பல்வேறு பொது நல அமைப்புகளும் பல ஆக்கப் பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, சமீபத்தில் இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் எடுத்த முயற்சிகளின் விளைவாக,  ஜீ தமிழ் தொலைகாட்சியின் 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியின் மூலம் காணொளிப் படம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

500 பிளாட் செல்லும் பகுதி


இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியாக க‌ட‌ந்த‌ சில‌ நாட்களுக்கு முன்,  நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் திரு.குபேந்திரன், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு நந்த குமார், சுகாதாரத்துறை  உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கீழக்கரையில் ஆய்வு செய்து சென்றனர். இதன் தொடர்ச்சியாக கடற்கரையை ஒட்டிய கலங்கரை விளக்கம் பகுதிகளில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்னும் நகருக்குள் துப்புரவு பணியாளர்களால், பல காலங்களாக கண்டு கொள்ளப்படாத 'குப்பை களஞ்சியங்கள்' ஏராளமாக காணப்படுகிறது. 


இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் நிர்வாகி A.M.ஹாஜா அனீஸ் அவர்கள் கூறும் போது " கீழக்கரை மேலத் தெருவிலிருந்து 500 பிளாட் செல்லும் பகுதியிலும், பழைய குத்பா பள்ளி பின்புறம் உள்ள அஞ்சு வாசல் கிட்டங்கி பகுதியிலும்  காலம் காலமாக, துர்நாற்றம் வீசும் கோழிக் கழிவுகள், மக்காத குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. 

இந்த பகுதிகளில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் பறந்து கொண்டிருக்கிறது. இந்த பக்கம் கடந்து செல்பவர்கள் துர்நாற்றம் தாங்காமல் வேறு பக்கமாக சுற்றிச் செல்கின்றனர். நகராட்சி ஆணையர் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற ஆவன செய்ய வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 

அஞ்சு வாசல் கிட்டங்கி பகுதி - O.J.M.தெரு, கீழக்கரை
இது குறித்து மேலத் தெருவைச் சேர்ந்த மசூது மவுலானா அவர்கள் கூறும் போது "சமீபத்தில் நம் கீழக்கரை நகரின் சுகாதார சீர்கேடு புகார்கள் அடிப்படையில், நேரடி ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் ஆண்டாண்டு காலமாக குப்பைகள் கிடக்கும் பகுதிகளை ஆய்வு செய்யாமல், நல்ல நிலைமையில் உள்ள சில பகுதிகளுக்கு மட்டும் சென்றுள்ளனர். 

இந்த 500 பிளாட் குப்பை மேட்டின் அருகில் தான் தொழுகை பள்ளிவாசல் உள்ளது. தொழுகைக்கு செல்பவர்கள் கூட, இந்த துர் நாற்றம் மிகுந்த குப்பைகளால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பகுதியில் உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும். இல்லாத போது வஞ்சிக்கப்பட்ட பகுதியாக, இந்த பகுதியை அறிவித்தால் நல்லது" என்று விரக்தியுடன் தெரிவித்தார்.