தேடல் தொடங்கியதே..

Friday 19 October 2012

கீழக்கரையில் டெங்கும் இல்லை.. மலேரியாவும் இல்லை.. - சுகாதாரத் துறையினர் தரும் 'நகைச்சுவைத் தகவல்' !

த‌மிழ‌க‌ம் முழுவ‌தும் டெங்கு காய்ச்ச‌லால் ஏராள‌மான‌வ‌ர்க‌ள் இறந்துள்ளனர். பலர் கடுமையான நோய் தாக்கத்தால் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ நிலையில், அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல அச்சப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். நம் இராமநாதபுரம் மாவட்டத்திலும் பெரியவர்கள், குழந்தைகள் என பலர் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்த நிலையில், கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கும் இல்லை, மலேரியாவும் இல்லை என சுகாதாரத் துறையினர் செய்தி ஊடகங்களுக்கு நகைச்சுவைத் தகவல் அளித்திருக்கின்றனர். இது கீழக்கரை பகுதி பொதுமக்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. 




அதே வேளையில் ஆறுதல் அளிக்கும் விதமாக, சுகாதாரத் துறையினருடன் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி, தாசிம் பீவி அப்துல் காத‌ர் மகளீர் க‌ல்லூரி, இஸ்லாமியா ப‌ள்ளிக‌ள், ச‌த‌க்க‌த்துன் ஜாரியா ப‌ள்ளி, கைராத்துல் ஜ‌லாலியா ப‌ள்ளி, செய்ய‌து ஹ‌மீதா க‌ல்லூரி ஆகியவை இணைந்து, கீழக்கரை பகுதியில் டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க விழிப்புண‌ர்வு பேரணி ந‌டைபெற்ற‌து. இந்த பேரணியில் பெரும் திரளாக பங்கேற்ற ஆயிர‌க்க‌ண‌க்கான‌ மாண‌வ‌ மாண‌விய‌ர் டெங்கு ஒழிப்பு குறித்த‌ வாச‌க‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ப‌தாகைக‌ளை கையில் ஏந்திய‌ப‌டி வ‌ந்த‌ன‌ர். மேலும் "கொசுக்களை அழிப்போம்.. டெங்குவை ஒழிப்போம்.." என்று டெங்கு கொசுக்களுக்கு எதிரான கண்டனங்களையும் பதிவு செய்தனர். மேலும் இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் சார்பாக   விழிப்புண‌ர்வு  நோட்டீஸ்க‌ளை, மாணவர்கள் வீடு வீடாக‌ சென்று விநியோகித்த‌ன‌ர்.


              சுகாதாரத் துறையினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் :

டெங்கு என்பது மனநோயா? 'டெங்கு இல்லவே.. இல்லை.' என அடிக்கடி செய்தி ஊடகங்களில் அறிக்கைகள் விட்டு, எங்களை மனதளவில் பண்படுத்த நினைக்கின்றீர்களே.. மன நோயாக இருந்திருந்தால் உங்கள் நகைச்சுவை அறிக்கைகளே போதும். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  மருந்தாக அமைந்திருக்கும். ஆனால் இது உடல் கூறுகளை எல்லாம் கூறு போடும் அபாய  கோடரியாக அல்லவா இருக்கிறது. அரசு மருத்துவ மனைகளில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படாததால், உங்களுக்கு புள்ளி விபரங்கள் கிடைக்க வில்லை என்பதற்காக... புள்ளியே இல்லாமல் இந்த பகுதியில் கோலம் போட்டு குதூகலித்துக் கொண்டிருக்கும் டெங்குவை இல்லை என்று சொல்லுவதா??

நிற்க. கீழக்கரையில் டெங்கு இல்லை என்றாவது சொல்லி விட்டு செல்லுங்கள்.. எங்களின் பிறப்போடு நகமும், சதையுமாக, எங்களை முடக்கிப் போட்டு, நடை பிணமாக மாற்றி, எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மலேரியாவும் இல்லை என அறிக்கை விட்டு எறியும் நெருப்பில் எண்ணையை ஊற்றாதீர்கள். 'மழை காலத்தில் வரும் காய்ச்சல்கள் எல்லாம் டெங்கு என கருத முடியாது' என தமிழக முதல்வர் அவர்கள் அறிக்கை விட்டு இருக்கிறார்கள். அவ்வாறே உண்மையாக இருப்பின், மட்டற்ற மகிழ்ச்சி அடைவது எம் மக்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்??

No comments:

Post a Comment