தேடல் தொடங்கியதே..

Saturday 20 October 2012

கீழக்கரையில் இரவு பகலாக பெய்து வரும் கன மழை - குளிர்ந்த பூமியால் பொதுமக்கள் மகிழ்ச்சி !

கீழக்கரையில் கடந்த வாரம் முதல் மிதமாக பெய்து வந்த மழை, நேற்று முன் தினம் முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய துவங்கியுள்ளது. இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் பிடிப்பு பகுதிகளில், நீர் வரத்து காணப்படுகிறது. இந்த மாத துவக்கத்தில் கடும் வறட்சியால் பாளம், பாளமாக வெடித்து காணப்பட்ட 'சக்கரை கோட்டை கண்மாய்' தற்போது தண்ணீர் காடாக காட்சியளிக்கிறது.



இன்றும் (20.10.2012) கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. தொடர்ச்சியாக இடைவிடாமல் சாரல் மழையும் பெய்து வருகிறது. எங்கும் குளிர்ந்த காற்றும் வீசுகிறது.  இதனால் கோடையின் தாக்கத்தால் புழுங்கித் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


'சக்கரை கோட்டை கண்மாய்'
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி வருவதால், தமிழகத்தில் தற்போது பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. அடுத்த 24 மணி  நேரத்தில் தமிழகத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் 'சென்னை முதல் கன்னியாகுமரி' வரை கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  



கடந்த கால மழைப் பதிவுகளை வைத்து பார்க்கும் போது காற்றழுத்த தாழ்வு நிலையானது, மன்னார் வளைகுடா பகுதியில் கடக்கும் போதும், அந்த பகுதியில் நிலை கொண்டு  நீடிக்கும் போதும் மிக, மிக பலத்த மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இறைவன் நாடினால் அடுத்த 24 மணி  நேரத்தில், நம் தென் தமிழ் கடலோர மாவட்டங்களில் இன்னும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம். இது போன்ற மலை பெய்யும் தருணங்களில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது.


இடியில் இருந்தும், மின்னலின் தாக்கத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள, பொதுமக்கள் வெட்ட வெளியில் நிற்க கூடாது. ஒற்றை மரத்தின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும்.  மேலும் நிறைய மரங்கள் இருந்து அதில் உயரமான மரத்தின் கீழும் நிற்க கூடாது.

மழை பெய்யும் போது வீட்டில் இருப்பது நல்லது. வீடுகளில் இடி அல்லது மின்னலின் போது, டிவி, மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த கூடாது.

மழை காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம.

மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்ல கூடாது என மற்றவரையும் எச்சரியுங்கள்.

விபத்து ஏற்பட்டால், மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடி தகவல் அளியுங்கள். இடி அல்லது மின்னலின் போது, தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாத பட்சத்தில் மின் கம்பிகள், கம்பங்கள், மரங்கள், உலோக கம்பிவேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள்.

Comments  
  • KeelaiPamaran Karuthu (கீழை பாமரன் கருத்து) : ம‌ழை அருளாள‌னின் அருட்கொடை இந்த‌ அருட்கொடையை சேமித்து வைக்க‌ ந‌ம்மிட‌ம் திட்டமில்லை த‌மிழ்நாடு அர‌சு ம‌ழை நீர் சேமிப்பு திட்ட‌த்தை முழுமைப்ப‌டுத்த‌ வேண்டும் அப்போதுதான் வ‌ற‌ட்சியான‌ கால‌ங்க‌ளில் த‌ண்ணீர் ப‌ஞ்ச‌ம் இல்லாம‌ல் பாதுகாக்க‌ முடியும்.எது எப்ப‌டியோ ம‌ழை நீரை க‌ண்ட‌வுட‌ன் இத‌ய‌ம் இனிக்கிற‌து க‌ண்க‌ள் ப‌ணிக்கிற‌து.

No comments:

Post a Comment