தேடல் தொடங்கியதே..

Tuesday 30 April 2013

கீழக்கரையில் சுற்றித் திரியும் சொறி நாய்கள் - அசம்பாவிதங்கள் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க 'கீழக்கரை நகர் நல இயக்கம்' மாவட்ட ஆட்சியருக்கு மனு !


கீழக்கரையில் இப்போது வெறி நாய்கள், சொறி நாய்கள்  தொல்லை பெரும் பிரச்சினையாக, பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. கீழக்கரை நகர் மக்கள் தொகை பெருக்கத்திலும், நகரின் எல்லை விரிவாக்க வளர்ச்சியிலும் உச்சம் அடைந்து வருகிறது. அதே நேரம் வெறி நாய்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனால் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களும், தெருக்களில் தளர் நடை போடும் முதியவர்களும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கீழக்கரை நகர் நல இயக்கத்தினர், மாவட்ட ஆட்சியருக்கும், சம்பந்தப்பட்ட துறையினருக்கும் மனு அனுப்பி உள்ளனர். 


இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர். ஜனாப். பசீர் அஹமது அவர்கள் கூறும் போது "வீடுகளில் செல்லப்பிராணியாக நாய் வளர்ப்போர் அதை முறையாக பராமரித்து தடுப்பூசி போட்டு வெளியில் விடாமல் பாதுகாத்து வருகிறார்கள். இருப்பினும் பெரும்பாலானோர் நாங்களும் 'நாய் வளர்க்கிறோம்' என்று சொல்லி கொண்டு அதை தெருவில் விட்டு விடுகிறார்கள். 
கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் கலெக்டருக்கு அனுப்பி இருக்கும் மனு 

இவ்வாறு தெருவில் விடப்படும் நாய்கள் குட்டி போட்டு பல மடங்காக பெருகி வருகிறது. அவை முறையாக பராமரிக்கப்படாததால் கிருமிகள் தாக்கி சொறி பிடித்து, நாக்கில் எச்சில் வடிந்து சொட்ட சொட்ட, பொதுமக்களை கடித்துக் குதற, தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து பொதுமக்களை காக்கும் நல் எண்ணத்தோடு கலெக்டருக்கு மனு அனுப்பி இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.       


கீழக்கரையின் புற நகர் பகுதிகளான புதுக் கிழக்குத் தெரு, 500 பிளாட், வடக்குத் தெரு கொந்தக்கருணை அப்பா பள்ளி பகுதி, மேலத் தெரு போன்ற தெருக்களில், மூர்க்கமாக அலையும் சொறி நாய்களின் பயத்தால் இரவில் மக்கள் நடமாட அச்சம் கொண்டு வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும் நிலையை காண முடிகிறது. இந்த வெறி நாய்கள் ஊளையிட்டுக் கொண்டு சத்தம் போடுவதால் வீடுகளில் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இரவில் கூட்டம் கூட்டமாக அலைகின்றன. என்று புற நகர் பகுதி பொது மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். பல நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை துரத்திக் செல்வதால் விபத்துகள் நேரிடவும் வாய்ப்பாக இருக்கிறது.

No comments:

Post a Comment