தேடல் தொடங்கியதே..

Sunday 19 May 2013

கீழக்கரையின் 'ஸ்பெஷல்' பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் தின மலர் நாளிதழ் - மூத்த பத்திரிகையாளருக்கு குவியும் பாராட்டுகள் !


கீழக்கரையின் வாழும் பெருமைகளை, உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக, நேற்று  (18.05.2013) தின மலர் நாளிதழின் மதுரை பதிப்பில் 'அக்கம் பக்கம்' பகுதியில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பக்கம் முழுவதும் கீழக்கரையின் ஸ்பெஷல்களான ஒட்டுமா, பட்டை சோறு, மீன் பிடி தொழில், பூத்துக் குலுங்கும் புதுமைப் பூக்கள், கீழக்கரையில் வரலாற்று ஆய்வாளர் என்று மூத்த பத்திரிகையாளர். அருமை சகோதரர். ஜனாப். தாஹீர் ஹுசைன் அவர்கள் அதிரடியாக அசத்தி இருக்கிறார்.



இந்த பதிவினை வாசித்த உள்ளூர்வாசிகளும், சமூக ஆர்வலர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்ததோடு, தாஹீர் ஹுசைன் அவர்களை நேரிலும், அலைப் பேசியில் தொடர்பு கொண்டு  தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



(மேலே உள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கும்) 'பஞ்சுமா ராத்தா' என்கிற செய்யது அலி பாத்திமா அவர்கள் கீழக்கரை நடுத் தெரு (பெத்தம்மா கபுரடி) அருகில் குடிசைத் தொழிலாக, தன் கணவரின் ஒத்துழைப்போடு  வீட்டிலேயே ஒட்டுமா, கலகலா, லொதல், சீப் பணியம் என ருசி மிகும் உணவு பதார்த்தங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் செயலாளரும், 18 ஆவது வார்டின் கவுன்சிலருமான M.U.V.முஹைதீன் இபுறாகீம் அவர்களின் மனைவியார் எனபது குறிப்பிடத் தக்கது.

இது குறித்து துபாய் ETA STAR STEEL நிறுவனத்தில் பணியாற்றும் கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த நசீர் சுல்தான் அவர்கள் தன் முகப்புத்தகத்தில் எழுதி, பகிர்ந்து இருக்கும் மணம் கமழும் ஒட்டுமா பற்றிய கவிதை வரிகள் இதோ :

ஒட்டுமா
பசி ஓட்டும் மா...

கடற்கரையோர மண் - புது
கட்டிட முன் குவித்திருக்கும்
சரளை மண்
பார்க்கும் போது
சட்டென்று
மனதிற்குள் ஒட்டும் ஒட்டுமா

கிள்ளி எடுக்கும் பசிக்கு
கொஞ்சம் அள்ளி போட்டால்
அப்படியே அடங்கும் பசி...
அரை மணி ஆகியும் - வாயில்
அடங்காது அதன் ருசி..!

முட்டையும்
உருக்கிய நெய்யும்
கட்டி தேங்காய்ப் பாலும்
சீனியும் சேர்த்து பெரும்
வட்டியில் இட்டு வறுக்கும் போது
வாசனை வா வா எங்கும்...
வாசலில் போறவரை
வீட்டுக்குள்ளே அழைக்கும்....

எங்க ஊருக்கென்றே ஒரு குணம்
வேறெங்கும் கிடைக்காது இது தினம்
பக்குவமாய் செய்வோர் செய்தால்
கிடைக்கும் தனி மணம்..!

குடும்பத்தில் ஒருவர் வெளி நாட்டில்
குடி பெயர்ந்து இருப்பதால்
எடுக்கும் பார்சலில் எல்லாம்
ஒட்டுமா கிடைக்கும்...
ஒருவர் போய் ஒருவர் வந்தும்
ஒட்டுமா கட்டாயம் இருக்கும்..!

கீழை இளையவன் மறு மொழி : அன்புக் காக்கா.. கடல் கடந்து தொலை தூரத்தில் இருக்கும் நம் கீழக்கரை  அன்பர்களின்  ஸ்பெஷல் இறக்குமதியான ஓட்டுமா... அங்கு ஒரே நாளில் தீர்ந்து விட்டாலும் கூட,  தங்களின் கவிதை வரிகளை வாசிக்கும் தருணங்கள்... கற்பனை நினைப்பில் அவர்கள் வாயில் இடும் ஓட்டுமா.. நிச்சயம் நெஞ்சில் நீங்காது ஒட்டிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.




கீழக்கரை பெத்தரி தெருவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஆனா மூனா சுல்தான் அவர்கள் குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி 

கீழக்கரையில் ஒரு வரலாற்று ஆய்வாளர் - ஆனா. மூனா சுல்தான் அவர்களின் ஆச்சரியமூட்டும் ஆய்வுகள் ! (முந்தைய செய்தியை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்)

கீழக்கரையின் சுவராஸ்யங்களை சுவை குன்றாமல் அள்ளித் தந்திருக்கும் மூத்த மத்திரிகையாளர் சகோதரர். ஜனாப். தாஹீர் ஹுசைன் அவர்களுக்கு கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மூத்த பத்திரிக்கையாளருக்கு வாழ்த்து சொல்ல விரும்பும் அன்பாளர்கள் அழைக்க வேண்டிய அலைப் பேசி எண் :

94880 06095 / 99524 05581 / 04567 - 241555

1 comment:

  1. வாக்காளர் அட்டை, பொது உணவு பொருள் வினியோக அட்டை (ரேஷன் கார்டு),பத்திரிகை செய்திகள் முதலானவற்றில் ஆண்,பெண் முஸ்லீம் பெயர்களை ஏன் தான் தப்பு தப்பாக பதிவு செய்கிறார்கள் என்று புரியவில்லை. இதில் கூட (பூவையர் கல்லூரி... என்ற தலைப்பில்)பி.எஸ்.அப்துர் ரஹ்மான் என்பதற்கு பதிலாக பி.எஸ்.அப் ஆர் ரக்மான் என பதிவாகி உள்ளது.

    அறியாமல் செய்கிறார்கள் என்று சொல்லுவதற்கில்லை. பள்ளிப் பருவத்திலிருந்தே இஸ்லாமிய மக்களுடன் இரண்டர கலந்து தான் வாழ்ந்து வருகிறார்கள்.அப்படி இருக்கையில் .... ?

    இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பம் போன்ற அதி முக்கியமான பணிகளுக்கு எவ்வளவு இன்னல்களை கொடுக்கிறது எனபது அனுபவிப்பவர்கள் மட்டுமே உணர்ந்த ஒன்று.

    ReplyDelete