தேடல் தொடங்கியதே..

Thursday 2 August 2012

கீழக்கரையில் ஆம்னி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தினால் மாணவ மாணவிகள் கடும் அவதி - காவல் துறையினர் வழங்கிய புத்திமதி !


கீழக்கரை நகரில் முறைகேடான படி பள்ளிக் குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்வதாகவும், இதனால் பெரும் ஆபத்தை பள்ளிக் குழந்தைகள் எதிர் நோக்கி இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட வாகனங்களில் முறையான ஆவணங்கள் இல்லாமல் இருப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்ததை ஒட்டி, பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை, காவல் துறையினர் கடந்த (30.07.2012) அன்று திடீர் வாகன சோதனை செய்தனர். இந்த வாகன சோதனையின் போது பல வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.




இந்நிலையில் நேற்று முன் தினம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றும் ஆம்னி டிரைவர்கள் திடிரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சரியான நேரத்தில் கல்வியகங்களுக்கு செல்ல முடியாமல் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். பெரும்பாலானவர்கள் கட்டாய விடுப்பு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பெற்றோர்களில் பலரும் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அழைத்து செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. முன்னதாக தின நாளிதழ் ஒன்றில் இது குறித்து வாகன விழிப்புணர்வு செய்தி வெளியிட்டிருந்த கீழக்கரை பத்திரிகையாளரை கண்டித்து, அடையாளம் காணப்படாத நபர்கள் துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருந்தனர். இதனால் நேற்று முன் தினம் சிறிது பரபரப்பு நிலவியது.




இதற்கிடையே கீழக்கரை காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், கீழக்கரை காவல் துறையினர், ஆம்னி ஓட்டுனர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் கீழக்கரை காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் திரு.இளங்கோவன், சார்பு ஆய்வாளர் திரு.கார்மேகம் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பள்ளி, கல்லூரி ஆம்னி ஓட்டுனர்களுக்கு பல்வேறு அறிவுரைகளும், புத்திமதிகளும், காவல் துறையினராலும், சமூக ஆர்வலர்களாலும் வழங்கப்பட்டது. அத்தனை அறிவுரைகளையும் ஏற்று முறையாக நடப்பதாக ஆம்னி ஓட்டுனர்கள் உறுதி மொழி அளித்தனர்.


இறுதியாக காவல் துறையினரால் எழுத்து மூலம் பெறப்பட்ட பின் வரும் கட்டுப்பாடுகளை, ஆம்னி ஓட்டுனர்கள் மீறும் பட்சத்தில், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து அனுப்பினர்.

1. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் எப்போதும் முறையான ஆவணங்களும், வாகனம் தகுந்த பராமரிப்புடனும் இருக்க வேண்டும்.

2. தங்கள் வாகனங்களில் வரும் மாணவ, மாணவிகளை நல்ல முறையில் பள்ளிக்கு அழைத்து சென்று வீட்டில் விட வேண்டும். முக்கியமாக ஓட்டுனர்கள் எந்த பிள்ளையையும் தங்கள் மடியில் உட்கார வைத்து வாகனத்தை ஓட்டக் கூடாது.

3. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லு ஆம்னி வாகன ஓட்டிகள் தங்கள் பெயர், முகவர் உள்ளிட்ட முழு விபரம், வாகன உரிமையாளர் குறித்த விபரம், ஓட்டுனர் உரிமை நகல், ஆர். சி. புத்தக நகல், வாகனங்களில் ஏற்றி செல்லும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் விபரம் போன்றவற்றை உடனடியாக காவல் நிலையத்தில் அளிக்க வேண்டும்.

4. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் ஆம்னி வாகனங்களில் கண்டிப்பாக சினிமா பாடல்களை ஒலித்து கொண்டு ஓட்டக் கூடாது.

5.  புத்தக பைகளை அதிக அளவில் மேற்கூரையில் ஏற்றுவதால் வளைவுகளில் கவிழும் ஆபத்து உள்ளது. மேலும் நகருக்குள் தெருக்க‌ளிலும், வ‌ளைவுக‌ளிலும் மின்னல் வேகத்தில் செல‌வதால் அடிக்க‌டி சிறு சிறு விபத்துக்கள்   ஏற்ப‌டுகின்ற‌ன‌. இதனை தவிர்க்க முறையான வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும். (இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.)


கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த தாம்பரத்தில்  2 ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ருதி என்கிற பள்ளி சிறுமி, பள்ளி வாகன ஓட்டை வழியாக விழுந்து உயிரழந்த பரிதாப சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


இதையடுத்து பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிகள் அடங்கிய அறிக்கையொன்றினை தமிழக அரசு நியமித்த 6 பேர் கொண்ட குழு இன்று (02.08.2012) சமர்ப்பிக்க இருக்கிறது. ஆக அசம்பாவிதங்களால் உயிரிழப்பு ஏற்பட்ட பின்னர், அதிரடியாக விதிகளை புகுத்துவதை விட, வரு முன் காக்க, பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வு பெறுவது அவசியமாகிறது. இது நம் கீழக்கரை நகருக்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. 

No comments:

Post a Comment