தேடல் தொடங்கியதே..

Thursday 26 April 2012

கீழக்கரை நகராட்சியில் இன்று நடை பெற்ற 'சாதிவாரி கணக்கெடுப்பு' விளக்க கூட்டம் - பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள் !

தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு 23.04.2012 அன்று துவங்கி 40 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பை விரைந்து நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நம் தாய்திரு  நாட்டில் கடைசியாக சுதந்திரத்துக்கு முன் 1931ம் ஆண்டில் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 80 வருடங்களுக்குப் பின் இப்போது தான் இந்த சாதிவாரி சென்சஸ் நடக்கிறது.


 


நம் கீழக்கரை நகரிலும், இந்த சென்சஸ் சிறப்பாக நடைபெற நகராட்சி ஆணையர் தலைமையில், நகராட்சித் தலைவர் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்ட சிறப்பு விளக்க கூட்டம் இன்று (26.04.2012) காலை 11 மணியளவில் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் சென்சஸ் திருப்திகரமாக நடைபெற, பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டது. 




இது குறித்து கீழக்கரை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முஜீபுர் ரஹ்மான் அவர்கள் கூறுகையில் "இந்த கணக்கெடுப்பின் போது பணியாளர்கள் வீடு வீடாக சென்று அனைத்துத் தரப்பு மக்களின் படிப்பு, வேலை, வருமானம், பொருளாதார நிலை, வீட்டு வசதி, சார்ந்துள்ள சாதி, வெளிமாநிலத்தவர்கள் குறித்த விவரம், மாற்றுத் திறனாளிகள், வீடு இல்லாத நபர்கள் குறித்த தகவல்கள் உள்பட 32 கேள்விகள் கேட்டு கணினியில் பதிவு செய்வார்கள்.




சுமார் 100 பணியாளர்கள் வரை இந்தப் பணியில் ஈடுபட உள்ளார்கள். நம் கீழக்கரை நகராட்சிப் பகுதி 60 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, நான்கு கட்டமாக நடை பெற உள்ளது. ஜூன் மாத இறுதிக்குள் கணக்கெடுப்பு பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.




இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகார இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. நம் கீழக்கரை நகரில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும், கணக்கெடுப்பின் போது சரியான தகவல்களை கொடுத்து ஒத்துழைக்குமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment