தேடல் தொடங்கியதே..

Wednesday 30 October 2013

கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில் இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் பலி - விபத்தை தடுக்க 'பத்து' பொன் விதிகள் !

கீழக்கரை -  இராமநாதபுரம் சாலையில் நேற்று (29.10.2013) மாலை 5.30 மணியளவில் நடை பெற்ற இரு சக்கர வாகன விபத்தில், கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஐடிஐ முதலாமாண்டு படித்து வந்த மாணவர். கருணாகரன் (திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தை சேர்ந்தவர்) உயிரிழந்தார். வாகனத்தை ஒட்டி வந்த அதே ஊரை சேர்ந்த, இவரின் நண்பர் பழனி இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் ஏதும் அணியவில்லை எனத் தெரிகிறது.

திருப்புல்லாணி உப்பளம் அருகே இவர்கள் வரும் போது, தூத்துக்குடியில் இருந்து மன்னார்குடிக்கு உரம் ஏற்றி சென்ற லாரி, டூவீலரில் மோதியதில், பின்னால் அமர்ந்திருந்த கருணாகரன் தூக்கி வீசப்பட்டு தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கல்லூரியில் வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


இது போன்ற இரு சக்கர வாகன விபத்தில் இறப்பவர்கள் பலரும், டூவீலரில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தான். அவர்கள் பெரும்பாலும் பின்னந்தலையில் அடிபட்டுத்தான் இறக்கின்றனர். இதற்கு காரணம் பின்னால் வரும் வண்டி மோதினாலோ அல்லது இடித்துக் கொண்டு சென்றாலோ விழும் போது, உடல் பின்நோக்கித்தான் செல்லும். அது உடல் இயல்பு. அறிவியல் உண்மை. அவ்வாறு திடீரெனெ தூக்கி வீசப்பட்டு தலையில் அடிபடும் போது இரத்தம் தலைக்குள்ளேயே சிந்தி உறைந்து போகிறது. 

இதன் விளைவாய் உடனடி மரணமும், பல நேரங்கள் கோமா ஸ்டேஜுக்கு சென்று அவர்கள் குடும்பம் கையில் வைத்திருக்கின்ற பணம் முழுவதையும் கரைத்த பிறகு, சப்தமில்லாமல் 'விதியின் வெற்றி'யுடன் இறந்து போகிறார்கள். சிலர் பிழைத்துக் கொள்கிறார்கள். சிலர் வருடக்கணக்காக படுக்கையில் படுக்கிறார்கள். ஆகவே தலையில் ஹெல்மட் அணிந்திருந்தால் இது போன்று விபத்துக்கள் ஏற்படும் வேளைகளில் தலையில் காயம் ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம்.


நாம் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் கடை பிடிக்க வேண்டிய பத்து பொன் விதிகள் :

1. சொந்த வாகனத்தை விடுத்து அடுத்தவர்கள் வாகனத்தை ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் நம் வாகனம்.. நம் சொல் கேட்கும். அதனை கட்டுப்படுத்துவது எளிது.  

2. உள்ளூருக்குள் வாகனம் ஓட்டும் போது, ஹெல்மெட் அணியாவிட்டாலும், இராமநாதபுரம் செல்லும் போதாவது அவசியம் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும். 

3. உள்ளூர் சாலைகளில் 30 கி.மீ. வேகத்திற்கு குறைவாகவும், கீழக்கரை - இராமநாதபுரம் சாலைகளில் 70 கி.மீ வேகத்திற்கு மிகாமலும் வாகனம் ஓட்டுவது, நல்ல கட்டுப்பாட்டை தரும். ஏனெனில் நம் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்கினங்கள் திடீரென சாலையின் குறுக்கே  பாய்வதால், வாகனத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மித வேகம் நல்லது.

4. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது அறவே கூடாது. நாம் மது அருந்தா விட்டாலும், கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில் வழி நெடுக டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு இருப்பதால், இங்கு குடித்து விட்டு வாகனம் ஒட்டி வரும் குடி மகன்களை கருத்தில் கொண்டு மிகுந்த முன்னெச்சரிக்கையாக வாகனம் ஓட்ட வேண்டும். 

5. முறையாக சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவதை கற்றுக் கொள்ள வேண்டும்.

6. செல் போனை சைலண்ட் மோடில் வைத்து விட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்ய பழகிக் கொள்வது நல்லது.

7. ஒரு வேலை அவசியமாக பேச வேண்டும் என்றால், சாலை ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு பேசுங்கள். 

8. ஒவ்வொரு முறையும் ஹாரன், பிரேக், ஹெட் லைட், இண்டிகேட்டர், டயரில் உள்ள காற்று அளவு உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா என சரி பார்த்து விட்டு பயணத்தை துவங்க பழக வேண்டும்.  

9. கீழக்கரையில் இருந்து செல்லும் போது முக்கு ரோடு, சதக் ஆர்ச், முனிய சாமி கோவில், வண்ணாந்துறை வளைவு, தோணிப் பாலம் வளைவு, திருப்புல்லாணி வளைவு,  பாலகரை வளைவு, ஆர்.எஸ் மடை வளைவு உள்ளிட்ட விபத்துகள் அதிகம் நடைபெறும் ஆபத்தான பகுதிகளில் அடுத்த வாகனங்களை, அசுர வேகத்தில் முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும். 

10. அதி முக்கியமாக வாகனம் ஓட்டும் முன்னதாக இறைவனை வேண்டி விட்டு, நம் அன்பு பெற்றோர்கள், மனைவி மக்களை மனதில் வைத்து பயணத்தை துவங்க வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் எதிர்பாராத விபத்துகளில் இருந்து பாதுகாப்பானாக.. 

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சா30 October 2013 at 21:01

    எத்தனையோ முறை இது சம்பந்தமாக பலரும் பல தரப்பட்ட முறை சங்கை ஊதி விட்டார்கள். ஆனால் பல்ன் தான் புஜ்ஜியமாக இருக்கிறது. விழிப்புணர்வு என்பது காத தூரத்தில் உள்ளது.என்ன செய்வது விதிக்கபட்டது தான் நடக்கும்.

    இதை விட பெரிய கொடுமை சமீப காலத்தில் கீழ்க்கரையில் 10,12 வயதுக்கு குறைவானவர்கள் மூவராக (டிரிப்பில்ஸ்) செல்லுவது அதிகரித்து வருகிறது. என்னென்ன விபரிதங்கள் நடக்க இருக்கிறதோ? படைத்தவன் தான் அறிவான்.

    இது விஷயத்தில் முதல் குற்றவாளி பெற்றோர்கள்.
    இரண்டாவது போக்குவரத்து காவலர்கள் (இது வரை கீழக்கரையில் இவர்கள் நியமிக்க பட்வில்லை).
    மூன்றாவது பள்ளிக் கூட நிர்வாகம் (இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வருபவர்களை கண்டிக்காதது)

    ReplyDelete