தேடல் தொடங்கியதே..

Tuesday 10 July 2012

தமிழகத்தில் 1870 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு - கீழக்கரை பகுதி தேர்வர்கள் மகிழ்ச்சி !

தமிழகத்தில் காலியாகவுள்ள 1,870 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நேற்று (09.07.2012) திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10-ம் தேதி கடைசி நாளாகும். செப்டம்பர் 30-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் அவ்வப்போது காலியாகி வருகின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் மூலமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், காலியாக உள்ள மேலும் 1,870 இடங்களுக்கு எழுத்துத் தேர்வின் மூலமாக ஆள்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடங்கியுள்ளது. 


விண்ணப்பிக்க கடைசித் தேதி:
எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வாணையத்தின் இணையதளத்தை (http://www.tnpsc.gov.in/latest-notification.html) மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே நிரந்தரப் பதிவு எண் வைத்திருப்பவர்கள் அதையே பயன்படுத்தி வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இணையதளம் மூலம் அனுப்புவதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 10 ஆகும். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த ஆகஸ்ட் 14-ம் தேதி கடைசி நாளாகும். செப்டம்பர் மாதம் 30-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை தேர்வு நடைபெறும். 



FILE PHOTO
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21 ஆகும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்புனர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் 40 வயது வரை தேர்வு எழுதலாம்.

பாடத் திட்டம்:
பொது அறிவுடன் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 100 வினாக்களும், பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்து 100 வினாக்களும் கேட்கப்படும். தேர்வுக்குத் தகுதி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 ஆகும். தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும்.  




V.A.O.தேர்வுக்கு விண்ணப்பிக்க பின் வரும்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இனைய தள முகவரியை சொடுக்கி விண்ணப்பிக்கலாம்.

                                             தேர்வுக்கு விண்ணப்பிக்க

மேலும் விவரங்களுக்கு:
விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் விவரங்கள் தேவையெனில், தேர்வாணைய அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (044-2829 7591 மற்றும் 2829 7584), கட்டணமில்லாத சேவை எண்ணிலோ (1800 425 1002) தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த V.A.O தேர்வுக்கான அறிவிப்பினால், அரசு வேலையில் சேர கனவுகளுடன் காத்திருக்கும், படித்த இளைஞர்களுக்கு, பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் இவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நம் கீழக்கரையை சார்ந்த V.A.O தேர்வுக்கு முயற்சிக்கும் தேர்வாளர்கள் அனைவரும், கடைசி நேர பர பரப்பை தவிர்க்கும் பொருட்டு, இப்போதே ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இந்த செய்தியை வாசிக்கும் அன்பாளர்கள் அனைவரும், தேர்வுக்கு முயற்சிக்கும் பலருக்கும் சென்றடைய ஏதுவாக, நம் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment