தேடல் தொடங்கியதே..

Tuesday 4 June 2013

கீழக்கரை நகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து தொடர் போராட்டம் - கவுன்சிலர் கூட்டிய பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு !

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌த்தில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதனை களையும் நோக்கோடும் பொது மக்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்கும் கலந்தாய்வு கூட்டம் கடந்த 31.05.2013 வெள்ளிக்கிழ‌மை மாலை 4.30 ம‌ணிய‌ள‌வில் உசைனியா திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இதில் கீழக்கரை நகரின் பல்வேறு பொது நல அமைப்புகளின் நிர்வாகிகளும், சமூக நல அமைப்புகளின் அங்கத்தினர்களும், அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.





இதில் சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) கட்சியின்  மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது தலைமை வகித்தார். இந்த கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் கீழக்கரை நகராட்சியின் "19 மாத கால சாதனை கீழக்கரை மக்களின் வேதனை" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதில் 19 மாத காலத்தில் 7 கோடியே 64 லட்சம்  நிதியில் நடைபெற்ற திட்டப் பணிகள், அதை செய்த ஒப்பந்ததாரர், அவர் செய்த பணி குறித்து ஆய்வு, நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் பேசிய த.மு.மு.க நகர் தலைவர் சிராஜ்தீன் அவர்கள் பேசும் போது "இது போன்ற முறைகேடுகளை நாம் அனுமதிக்க கூடாது. தடுத்து நிறுத்தப்பட வேண்டும்." என்று பேசினார். 

கீழக்கரை SDPI கட்சி நிர்வாகி அப்துல் ஹாதி அவர்கள் பேசும் போது "இதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அனைத்திற்கும் ஆதாரம் தந்துள்ளார். இதை வண்மையாக கண்டிக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 


கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை (KMT) செயலாளர் இஸ்மாயில் அவர்கள் பேசும் போது "பொது மக்கள் விழிப்புணர்வு பெறாதவரை எதுவும் நடக்கப் போவதில்லை. இங்கு வழங்கப்பட்டிருக்கும் கைஎடையும் சொல்லப்படும் கருத்துகளையும் அத்தனை கீழக்கரை மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்" என்று கம்மிய குரலில் வருத்தத்துடன் பேசி முடித்தார். 

கீழக்கரை TNTJ நிர்வாகி ஹாஜா முகைதீன் அவர்கள் பேசும் போது "தேர்தல் வந்தவுடன் அதில் எப்படி முறைகேடுகள் செய்யலாம் என்று கவுன்சிலர்கள் திட்டம் போட்டு விடுகின்றனர். எனவே தேர்தலில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்" என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார். 

கீழக்கரை சமூக ஆர்வலர். சேகு சதக் இபுறாகீம் அவர்கள் பேசும் போது "நம்மில் பலர்.. நம் நகர் நலனை முன்னிட்டும், நகராட்சியின் முறைகேடுகள் குறித்தும் பேஸ் புக்கில் கருத்துகள் பதிவோடோடு சரி.  பெரிதாக எதையோ சாதித்து விட்டதாக மகிழ்கின்றனர். என்றாவது சம்பந்தப்பட்ட துறையினருக்கு இது குறித்து புகார் மனுக்கள் அனுப்பி இருக்கிறீர்களா ? தகவல் அறியும்  உரிமை சட்டம் குறித்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? எதையும் நாம் முறையாக விளங்கி சட்டப் படி அதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்." என்று பேசினார். 



கீழக்கரை  SDPI கட்சியின் நிர்வாகி ஆனா. முஜீப் அவர்கள் பேசும் போது "நம் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மாயாகுளம் வரை வந்து ஆய்வு செய்து சாலைகள் சரியாக போடவில்லை என பேட்டி கொடுக்கிறார். ஆனால் கீழக்கரை நகருக்குள் இத்தனை பிரச்சனைகள் இருக்கிறது. அப்படியிருந்தும் கண்டு கொள்ள மறுக்கிறார்." என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகப் பொருளாளர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் பேசும் போது "இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கவுன்சிலர்களுக்கும் அழைப்பு விடுத்ததாக முகைதீன் இபுறாகீம் கூறுகிறார். ஆனால் இங்கு எந்த கவுன்சிலர்களும் பங்கு கொள்ளவில்லை. ஆதலால் 18 வது வார்டு கவுன்சிலர் சுட்டி காட்டும் நகராட்சி குறித்த ஊழல்களில், ஏனைய கவுன்சிலர்களுக்கும் பங்கு இருக்குமோ..? என்று பொதுமக்களாகிய நாம் எண்ணத் தோன்றுகிறது.

கீழக்கரை நகராட்சியில் நடைபெறுவதாக சொல்லப்படும் ஊழல்கள், கமிசன்கள், இலஞ்ச லாவண்யங்கள் அத்தனையும் எப்போது துவங்கியது தெரியுமா..? என்றைக்கு உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார்களோ ? அன்றே துவங்கி விட்டது. அன்றைய தினத்திலிருந்தே தங்கள் செலவுக் கணக்கையும், தாங்கள் நகராட்சியில் முதலீடு செய்த கணக்கையும் எழுதத் துவங்கி விட்டார்கள். தாங்கள் செய்த முதலீட்டினை, நல்ல இலாபத்துடன் வட்டியும் முதலுமாக திரும்பப் பெற இன்று வரை உயிரைக் கொடுத்துப் போராடி வருகிறார்கள். என்னுடைய வருத்தம் எல்லாம் முதலீடு செய்வதற்கு நகராட்சி என்ன தொழில் செய்யும் இடமா..? 



இந்த நகராட்சி நிர்வாகம் மூலம் எத்தனையோ அசவுரியங்கள் பொதுமக்களுக்கு இருந்தாலும் கூட சிலவற்றை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கீழக்கரை நகராட்சிக்கு ஒரு நல்ல பொறுப்பான ஆணையரை, தமிழக அரசு பணியமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் ஆவல் கொண்டிருந்த சமயத்தில், கடந்த ஆண்டு பொறுப்பேற்ற, நகராட்சி  கமிசனர் அவர்கள்  தன் பொறுப்புகளை உணர்ந்து செயல்படாமல் காலம் தாழ்த்தி வருவது வருத்தமளிக்கிறது. அவர் நகர் நலனில் அக்கறை இல்லாமல் நடந்து கொள்ளும் பொறுப்பற்ற பல பணிகளால், கீழக்கரை நகராட்சியின் வருவாயும், மத்திய மாநில அரசுகளின் நிதிகளும் வீணாகி வருகிறது. 

ஒரு உதாரணத்திற்கு கீழக்கரை நகராட்சிக்கு வாங்கியிருக்கும் கழிவு நீர் உருஞ்சும் (மெகா சக்கர்) வாகனத்தை எதற்காக வாங்கினார்கள் என்று இது வரை யாருக்கும் தெரியவில்லை. நம் கீழக்கரை நகர் மிக குறுகிய தெருக்களையும், சாலைகளையும் கொண்டது. ஆனால் நகராட்சி வாசலில் 'கும்கி யானை' போல் நிற்கும், கீழக்கரை நகரின் எந்த தெருக்குள்ளும் செல்ல முடியாத இந்த பிரமாண்டமான, மிகப் பெரிய உருவில் இருக்கும் இந்த வண்டியினால் என்ன பயன் இருக்கிறது..? 



கமிசனர் அவர்கள் நகர் மன்ற அங்கத்தினர்களுக்கு முறையாக அறிவுரை வழங்கி இருந்தால்,  இந்த மெகா வண்டியை வாங்கியதற்கு பதிலாக, அதே தொகையை வைத்து, கீழக்கரையின் அனைத்து தெருக்களுக்கு உள்ளும் செல்லக் கூடிய இரண்டு சிறிய அளவில் இருக்கும் கழிவு நீர் உருஞ்சும் ( மினி சக்கர் ) வாகனங்களையாவது வாங்கி இருக்கலாம். அதைக் கொண்டு நகரின் பல பகுதிகளில் வாருகால்கள் இல்லாமல் கழிவு நீர் தொட்டியை பயன்படுத்தும் இடங்களான புதிய கிழக்குத் தெரு, வடக்குத் தெரு சங்கு மால் சந்து போன்ற இடங்களில், நகராட்சி ஒரு சிறு தொகையை பெற்றுக் கொண்டு சேவை புரிந்து இருக்கலாம். இதனால் நகராட்சிக்கு ஓரளவு வருமானமும் கிடைத்திருக்கும்.

அதே போல கீழக்கரை புதிய நகர் மன்றம் பொறுப்பேற்று முதன் முதலாக வந்த அரசு நிதியான  ரூ .2 கோடியில் ரூ. 50 இலட்சம் கழிவு நீர் வடிகால்கள் அமைக்க ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை எடுத்த துணை சேர்மன் ஹாஜா முஹைதீன் அவர்களின் நண்பர் திரு. வெள்ளைசாமி எடுத்து பணியை துவங்கினார். என்ன காரணத்தினாலோ பணிகள் பாதியிலேயே விடப்பட்டு இருக்கிறது. தற்போது கீழக்கரையில் குப்பை பிரச்சனைகள் ஓரளவுக்கு மட்டுப்பட்டு இருக்கும் சூழலில் சாக்கடை பிரச்சனைகள் பெரும் தலை வலியாக உருவெடுத்துள்ளது. ஆனால் திரு. வெள்ளை சாமிக்கு அவர் வேலை பார்த்த வரை உள்ள அனைத்து தொகைகளும் (ரூ.1800000)  வழங்கப்பட்டு விட்டது. 

நம் வீடுகளில் சாதாரண கொத்தனார் வேலைகள் நடந்தால் கூட, அவர்களுக்கு பேசிய தொகையில் சிறிதளவை வேலை முடியும் வரை பிடித்து வைத்துக் கொள்வோம். அந்த சிறிய நடை முறை கூட நகராட்சி நிர்வாகத்தினருக்கு ஏன் தெரியாமல் போனது ? துணை சேர்மன் அவர்கள் ஆதரவோடு ரூ.5 இலட்சத்திற்கு வாருகால் மூடி போட பணி ஆணை வழங்கப்பட்டது. இங்கு வந்திருக்கும் பொது மக்களே.. சொல்லுங்கள். உங்கள் தெருக்களில் உள்ள வாருகால்களுக்கு மூடி போடப்பட்டு விட்டதா ? வாருகால்களுக்கு மூடி போட ஒன்றரை வருட காலமா.. சொல்லுங்கள்.

இனி வரும் காலங்களில் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் வரவு செலவுக் கணக்குகள் அத்தனையும் நமது ஊரின் அத்தனை அமைப்புகளின் சங்கங்களின் கோப்புகளில் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் தகவல் அறியும் உரிமைகள் சட்டம் 2005 ன் கீழ் அனைவரும் ஆக்கப்பூர்வ கேளவிகளை கேட்பதன் மூலம் அவற்றை பெற்று தவறுகள் நடை பெற்று இருப்பின் சட்ட நடவைக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் பணிகளை சரி வர செய்யாத ஒப்பந்ததாரர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, சட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் அவர்களை நம் ஊரிலிருந்து ஓட ஓட அடித்து விரட்ட வேண்டும்.  

இனி வரும் காலங்களிலாவது கவுன்சிலர்கள் இலஞ்சத்தை தவிர்த்து, நெஞ்சத்தை நிமிர்த்த வேண்டும். இங்கு வராத வார்டு கவுன்சிலர்களின் கவனத்திற்கு இங்கு பேசப்படும் செய்திகளை, இங்கு வந்திருக்கும் அந்தந்த வார்டு பெருமக்கள் கொண்டு சேருங்கள். அதனையும் விடுத்து அவர்கள் இன்னும் கமிசன்களை தொடர்ச்சியாக பெறுவார்களாயின், அடுத்த உள்ளாட்சி தேர்தலில் இதே வார்டு கவுன்சிலர்கள் போட்டியிட்டால், பொது மக்களாகிய நாம் இவர்களை செருப்பால் அடிப்பதை தவிர வேறு வழியில்லை" இவ்வாறு பேசினார். 



மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி இர்பான் அவர்கள் பேசும் போது "இனி வரும் காலம் பொது மக்களின் கைகளில் தான் உள்ளது. அவர்கள் விழிப்புடன் இல்லாமல் ஒன்றும் நடக்காது."என்று தெரிவித்தார். 

இந்த கூட்டத்தின் முடிவில் தலைமை வகித்த அப்துல் ஹமீது பேசும் போது "கீழக்கரையில் இந்த 19 மாத காலத்தில் 7 கோடிக்கு மேல் பெறப்பட்ட நிதியில் எந்த பணியும் நல்ல முறையில் நடைபெற்றிருப்பதாக தெரியவில்லை. அனைத்திலும் முறைகேடு நடந்துருப்பதாக அறிகிறேன். இதனை கண்டிக்கும் வகையில் பொது மக்களை திரட்டி நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக விரைவில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்" என்று தெரிவித்தார். கவுன்சிலர் முகைதீன் இப்ராஹிம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

2 comments:

  1. கீழக்கரை சமூக ஆர்வலர். சேகு சதக் இபுறாகீம் அவர்கள் பேசும் போது "நம்மில் பலர்.. நம் நகர் நலனை முன்னிட்டும், நகராட்சியின் முறைகேடுகள் குறித்தும் பேஸ் புக்கில் கருத்துகள் பதிவோடோடு சரி. பெரிதாக எதையோ சாதித்து விட்டதாக மகிழ்கின்றனர். என்றாவது சம்பந்தப்பட்ட துறையினருக்கு இது குறித்து புகார் மனுக்கள் அனுப்பி இருக்கிறீர்களா

    சகோதரர் சேகு சதக் இபுறாகீம் அவர்களின் இந்த கருத்து எங்களைப் போனறவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.அவர்கள் மிகுந்த விவரமானவர்கள்.

    ஜனநாயக அமைப்பில் தனி மனிதர்களால் எதையும் சாதிக்க முடியாது என்பது எழுதப்பட்ட நியதி. அதன் காரணமாகமே நாடளுமன்றம், சட்ட மன்றம்,நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் , பொது மக்கள் நல அமைப்புகள் போன்றவை ஜனநாயக நாட்டில் மக்கள் நல திட்டங்களை திறம்பட செயலாக்க ஏற்படுத்தப்பட்டன/ உருவாகப்பட்டன

    பொது மக்கள் தங்கள் பிரச்சனைகள சம்பந்தப்பட்டவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டு செல்ல பேஸ் புக் போன்ற ஜன ரஞ்சமான ஊடகங்கள் வழியாக முயற்சிக்கிறார்கள். பெரிதாக எதையோ சாதித்து விட்டதாக மமதை கொள்ள அல்ல என்பது எமது தாழ்மையான கருத்து.

    ஊர் கூடிதான் தேர் இழுக்க வேண்டும்.
    தனி மரம் தோப்பாகாது.

    ReplyDelete
  2. கீழை இளையவனின் கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்குரிய குறிப்பில் இரண்டாவது எமது இந்த பதிவுக்கு வலு கூட்டும் என நம்புகிறோம்.

    ReplyDelete