தேடல் தொடங்கியதே..

Sunday 11 August 2013

கீழக்கரை ஸ்பெஷல் உணவுகளை மனைவியின் அன்போடு பிணைத்திருக்கும் கீழக்கரை 'நசீர் சுல்தான்' அவர்களின் அன்பின் 'அறுசுவை' கவிதை - 'கணவன்கள் சிந்தித்தால்...' !

கீழக்கரை ஸ்பெஷல் உணவுகளையும், தின்பண்டங்களையும், மனைவியின் மட்டற்ற அன்பையும் இணைத்து 'கீழக்கரை கணவன்கள் சிந்தித்தால்...' என்கிற தலைப்பில், கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த நசீர் சுல்தான் அவர்கள் ஒரு 'அறு சுவை' கவிதை வடிவினை, கனிவுடன் தந்திருக்கிறார். இதன் மூலம், சொந்தங்களைப் பிரிந்து, சோகங்களை சுமந்தவர்களாக, கடல் கடந்து வாழும் நம் சகோதரர்களின் நெஞ்சில் நிழலாடும் நினைவுகளை புத்துணர்வூட்டி புதுப்பித்து இருக்கிறார்.  



நீங்களும் கொஞ்சம் இந்த கவிதை வரிகளை வாசித்து.. மறவா நினைவலைகளை சுவாசித்து... மறக்காமல் மனைவியை நேசியுங்கள்.

                                            கீழக்கரை கணவன்கள் சிந்தித்தால்......

ஊரில் பதியின் சுவையறிந்தோ
சூடை கருவாடு சொதி தருவாய்....
மெய்யுடன் மெய் சேர்ந்த கணம் நினைத்து
நெய் சோறுடன் கறி சமைப்பாய்....

வாகாய் வாய்க்கு தேங்காய் சோறுடன்
சீலா கருவாடும் சிறிய வெங்காயமும்
முருங்கை கீரையுடன்
முழு முட்டை அவித்து வைப்பாய்.....

இருக்கட்டும் வேலை அதிகம் எனினும்
கொழுக்கட்டை அவித்து
குடல் தலை சமைத்து தக்கடி செய்வாய்....

ஆசையாய் வங்கி வந்த
மாசியில் கறி செய்வாய்....
உணவால் மனதுக்குள் தறி நெய்வாய்....

எத்தினி வகை சமைத்தாலும்
நெத்திலி கருவாடு உன் கை வண்ணம்....
நினைத்தாலே வாயூறும் அது திண்ணம்..!

நெல்லு களியில் மோர் ஊற்றி
தொட்டு கொள்ள பொரிகடலை துவையல்...
எந்த உணவும் எளிதாய் இறங்க
தேங்காபால் புளியாணம் இடக்காய் பேசும்....

உன் இதழ் மடிந்த உருவில் மடக்கு கொழுக்கட்டை
இடித்த எள்ளில் தேனாய் கருப்பட்டி சேர்த்து
கம்பு புல்லில் கொழுக்கட்டை பிடிப்பாய்....

பசி ஏப்பம் எழும் முன்காலை
அப்பத்தில் முட்டை இட்டு
அருகு ஓரம் கருகிய மீன் ஆண சட்டியை
அருகில் வைப்பாய்....

கணவாய் உருண்டை இட்டு
கணவனுக்கு படைத்திடுவாய்....
மீன் மிளகுதண்ணி ஆணம் தந்து
வீண் சோம்பல் துரத்திடுவாய்..!

யோசித்து யோசித்து முறையாய் செய்து
மாசி கொழுக்கட்டை செய்வாய்....
இனி ஒத்தையாய் இருப்பது அறிந்தே
ஒத்தையை சுட்டு தருவாய்...!

வச்சி தந்த வட்டலப்பம்
வாரமாகியும் வாய் இனிக்க செய்வாய்...
அடைக்கு ஆட்டு கறி சாம்பார்
சோற்றுக்கு பொரியலாய் கோழி கறி..!

பொன்னான மாலையிலே போட்டு வைப்பாய்
நன்னாரி வேர் சாயா
அசதியிலே நான் இருந்தால்
அனல் பறக்கும் கால் பாயா


ஆவலுடன் நான் இருக்கும்
அந்தி கருக்கல் நேரத்திலே
அவலுடன் பிசின் அரிசி போதாதென
உன் கண்ணிரண்டு போல் வடிவில்
எள்ளுருண்டை எடுத்து தருவாய்


போதும்... போதும்...
இவ்வளவும் தின்ற - என்
உடல் எடை குறைய என்ன வழி...?

துபாயில்
வந்து இறங்கியவுடந்தான்
நீ வாங்கி கட்டி தந்த வகைகளை பார்க்கிறேன்.....
என்னை விட்டு பிரியாத  - உன் எண்ணம் போல்
எண்ணெய் ஒட்டிய காகிதங்களை பார்க்கிறேன்..!

எரிக்கின்ற வெயிலை மறைக்க
பொரிக்கும் சட்டி கொழுக்கட்டை....
கலகலாவை பிரித்தவுடன்  - உன்
கலகல சிரிப்பின் நினைவு....

உன்
கையால் செய்ததோ..?
கடையில் வாங்கியதோ...?
ஓட்டுமாவில் தெரிகிறது - உன்
உண்மை அன்பு..!

இனி
ஒரு பொழுது உறங்காமல் இருப்பதற்கோ
பணியமும் வெள்ளரியராமும்....
துதலில் இனித்த கருப்பட்டியாய் - உன்
நுதல் இனித்ததடி....
வாய்க்குள் வழுக்கி கொண்டு போகுதடி
வாங்கி தந்த நெய் அல்வா..!

உதட்டினில் பட்டால்
உயிர் வரை கரையும் மைசூர் பாக்கின் மகிமை
நீ தொட்டு தந்ததடி....

எதிர் பார்க்காமலே
பார்சலில் நிஜாம் பாக்கும்
பல கலரில் கேக்கும் இருப்பது போதாதென்று
காதரியா சர்பத்தும் இருந்ததடி...

மச்சானுக்கு பிடிக்குமென்று
மடிஞ்ச ஊறுகாய் இருக்கட்டும் என்று
நெருக்கி நொறுக்கி கட்டி தந்த நெய் முறுக்கு
இத்தனையும் கடையில் வாங்கினாய்....

இறுதியாய் விடை பெறும் முன் - உன்
இதழ் சுரந்த இனிப்பை எங்கு வாங்கினாய்...?

நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த கீழக்கரை நசீர் சுல்தான் அவர்களின் கவிதைகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

'மீண்(டும்)ட நினைவுகள் ரமலானில்' - கீழக்கரை 'நசீர் சுல்தான்' அவர்களின் கவிதை மழை !

கீழக்கரையில் பட்டையை கிளப்பும் 'பட்டை சோறு பிக்னிக்ஸ்' 


மணம் கமழும் கீழக்கரை ஒட்டுமா பற்றிய கவிதை வரிகள்

2 comments: