தேடல் தொடங்கியதே..

Saturday 13 July 2013

கீழக்கரை தெருக்களில் மீண்டும் குப்பைகள் தேங்குவதால் பெரும் சுகாதாரக் கேடு - பொது மக்களே தெருக்களை கூட்டி அள்ளும் அவலம் !

கீழக்கரை நகராட்சியில் 1 வது வார்டு பகுதி முதல் 11 வது வார்டு பகுதி வரையிலான தெருக்களில் சேரும் குப்பைகளை, அகற்ற துப்புரவுப் பணியாளர்கள் யாரும் வராததால், கடந்த 10 நாள்களாக இந்த பகுதிகளில் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தெருவெங்கும் குப்பைகள் சிதறிக் கிடக்கிறது. இந்த நாறும் குப்பைகளால், இந்த வார்டு பகுதிகளில் பெரும் சுகாதாரக் கேடு  நிலவி வருகிறது.

கீழக்கரையில் குறிப்பாக முஸ்லீம் பஜார் ஓட்டை கடிகாரம் சாலை, சேரான் தெரு மீன் கடைப் பகுதி, பழைய குத்பா பள்ளி தெரு, பருத்திக்காரத் தெரு, கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி அருகாமை உள்ளிட்ட பல இடங்களில் குப்பைகள் அளவற்று குவிந்து வருகிறது. கீழக்கரை நகராட்சியில் இருந்து துப்புரவுப் பணிக்கு ஆள்கள் வராததால், தெருக்களில் சிதறிக் கிடக்கும் குப்பைகளை பொது மக்களே அள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து கீழக்கரை தெருவை சேர்ந்த மூத்த சமூக ஆர்வலர் அலி பாட்சா அவர்கள் கூறும் போது "கீழக்கரை நகராட்சி தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களால் அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகளில் முதன்மையானது குப்பைகரையாக இருக்கும் நம் கீழக்கரையை, குப்பைகள் இல்லாத முன் மாதிரி நகராட்சியாக மாற்றுவது தான். ஆனால் கடந்த இரண்டாண்டு சாதனைகள், இந்த நாறும் குப்பைகளில் மட்டும் தான் நாற்றமெடுக்கிறது. 

தற்போது அள்ளப்படாத குப்பைகளால் நிலவும் அசாதாரண சூழலால் மீண்டும் பெயர் சொல்லத் தெரியாக நோய்கள் ஆட்டிப் படைக்குமோ என்று அச்சம், அனைவர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக இந்த விசயத்தில் தலையிட்டு நல்ல தீர்வு எட்டப்பட முயற்சிக்க வேண்டும்" என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார். 

No comments:

Post a Comment